ரிசர்வ் வங்கி சுயாட்சிக்கு மதிப்பு அளிக்கிறோம்.. சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம்
டெல்லி: ரிசர்வ் வங்கி சுயாட்சி அதிகாரத்துடன் செயல்படுவதற்கு மதிப்பளித்து மத்திய அரசு செயல்படுகிறது என்று நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், இதை செய்ய தவறினால் மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் அவ்வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா பேசியிருந்தார்.
இதற்கு ஏற்ப, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மத்திய அரசு நேரடியாக உத்தரவிட உதவும் சட்டப்பிரிவு 7வதை அமலுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதன் காரணமாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், தந்து பதவியை, ராஜினாமா செய்வது குறித்து பரிசீலிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஏற்கனவே சிபிஐ நடவடிக்கையில் மத்திய அரசு தலையிடுவதாக வெளியான தகவல்களை தொடர்ந்து, மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ள அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் அதிகாரம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசு நடைமுறை என்று கூறியுள்ளது. பல்வேறு முக்கிய அம்சங்களில் ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்த பின்பே முடிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொது மக்களின் நலம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கருதியே அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கிக்கு அரசு நேரடியாக உத்தரவிட வழிசெய்யும் சட்டப்பிரிவு 7 குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.