அயோத்தி தீர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் உ பி தலைமை செயலாளர்.. டிஜிபியுடன் தலைமை நீதிபதி ஆலோசனை
Recommended Video
டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில்- பாபர் மசூதி விவகாரம் தொடர்பான தீர்ப்பை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரபிரதேச உயர் அதிகாரிகளை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் அம்மாநில காவல்துறைத் தலைவர் ஓம் பிரகாஷ் சிங் ஆகியோரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்றத்தில் தனது அறையில் வைத்து சந்தித்தார்.
அப்போது நாடு மற்றும் அதன் அரசியல் மீது பெரும் தாக்கங்களைக் கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு அயோத்தி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விவாதித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது கடைசி வேலை நாளான நவம்பர் 15 க்கு முன்னர், அதாவது அடுத்த வாரம், பல ஆண்டுகளாக இருந்து வரும் பழமையான ராமர் கோயில்- பாபர் மசூதி நிலத்தகராறு விவகாரம் தொடர்பாக தீர்ப்பளிக்க உள்ளதாக தெரிகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17 அன்று ஓய்வு பெறுகிறார்.
அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதிபதி எஸ்.ஏ.போப்டே, அயோத்தி வழக்கை "உலகின் மிக முக்கியமான ஒன்று" என்று கூறியிருந்தார். தலைமை நீதிபதி தலைமயிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்துள்ளது. தீர்ப்புக்காக நாடேகாத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில்தான் உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் அம்மாநில காவல்துறைத் தலைவர் ஓம் பிரகாஷ் சிங் ஆகியோரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்றத்தில் தனது அறையில் வைத்து இன்று சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.