முதலில் ஒப்புதல், பின்னர் சோதனை... இறுதிகட்ட கொரோனா சோதனைக்கு தயாராகும் கோவாக்சின்
டெல்லி: தனது கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம்கட்ட சோதனைக்கு தேவையான தன்னார்வலர்களைச் சேர்க்கும் பணி முடிந்துவிட்டதாகவும், விரைவில் சோதனை தொடங்கப்படும் என்றும் பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் தடுப்பூசி வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி
இந்தியாவிலும் சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதற்குப் பலரும் பாராட்டியிருந்தாலும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைக்கு முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்டது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர்.

முதல் இரண்டு கட்ட சோதனை
இதற்கு விளக்கமளித்த அந்நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா, முதல் இரண்டு கட்ட சோதனைகளில் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் மனிதர்களின் உடலில் தேவையான தடுப்பாற்றலை உற்பத்தி செய்கிறது என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், எங்களைப் போல ஒரு சர்வதேச நிறுவனத்தை விமர்சிப்பது சரி இல்லை என்றும் கூறினார்.

சோதனைக்குத் தயார்
மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ள நிலையில், பாரத் பயோடெக் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையை மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியது. மூன்றாம்கட்ட மருத்துவ சோதனை மேற்கொள்ள போதுமான ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாலேயே இதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், மூன்றாம்கட்ட சோதனைக்குத் தேவையான தன்னார்வலர்களைச் சேர்க்கும் பணி நிறைவடைந்ததாகவும், விரைவில் மூன்றாம் கட்ட சோதனை தொடங்கப்படும் என்றும் பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.

அரசு விளக்கம்
மூன்றாம்கட்ட சோதனைக்கு முன்னர் கோவாக்சினுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, எய்ம்ஸ் இயக்குநர் இது குறித்து விளக்கமளித்திருந்தார். அதாவது, சீரம் நிறுவனத்திற்கும், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கும் ஒரே ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் சோதனை முறையில் கோவாக்சினை பயன்படுத்தவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து, சேமித்து வைக்கவும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் பணிகள்
இந்தியாவில் இன்னும் சில நாட்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்த வாரம் இதற்கான முதல் ஒத்திகை நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் ஒத்திகை நாளை நாடு முழுவதும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரத்து 460 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.03 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications