முறுக்கு மீசை.. ராவண கோஷம்.. பீம் ஆர்மி.. அரசை அதிர வைக்கும் சந்திரசேகர் ஆசாத்.. யார் இந்த இளைஞர்?
டெல்லியில் சிஏஏ போராட்டத்தின் முகமாக இருக்கும் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், மிக முக்கியமான அரசியல் தலைவராக உருவெடுத்து வருகிறார்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் சிஏஏ போராட்டத்தின் முகமாக இருக்கும் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், மிக முக்கியமான அரசியல் தலைவராக உருவெடுத்து வருகிறார். மத்திய அரசும், போலீசும், உளவுத்துறையும் இவரை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி கைதான பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்திற்கு ஜாமீன் வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால் நேற்று இரவு அவர் விடுதலை செய்யப்பட்டார். டெல்லியில் ஜம்மா மசூதியில் கடந்த டிசம்பர் 21ம் தேதி இவர் போராட்டம் நடத்தினார்.
இதனால் இவர் கைது செய்யப்பட்டார். பெயிலில் வந்த இவர் தற்போது மீண்டும் டெல்லியில் ஜம்மா மசூதி அருகே போராட்டம் செய்து வருகிறார்.

எப்படி
சிஏஏவிற்கு எதிராக டிசம்பர் 21ல் இவர் நடத்திய போராட்டத்தில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தலித்கள் மட்டுமின்றி, பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர். அரசியல் தலைவர் இல்லாத ஒருவருக்கு டெல்லியில் சமீப நாட்களில் இவ்வளவு கூட்டம் கூடியது இவருக்கு மட்டும்தான்.

தேடல்
அப்போதில் இருந்தே இவரை யார் என்று பலரும் கூகுள் தொடங்கி பல்வேறு தளங்களில் தேடி வருகிறார்கள். சந்திரசேகரின் ஆதரவாளர்கள் இவரை, ராவணன் என்றுதான் அழைக்கிறார்கள். ஆம் ராமர் கோவில் கட்டப்பட உள்ள அதே உத்தர பிரதேசத்தில் இருந்துதான் ராவணன் ஒருவர் தோன்றி இருக்கிறார்.

தமிழ் ஸ்டைல்
பொதுவாக மீசை வைக்க விரும்பாத வட இந்தியர்களுக்கு மத்தியில், தமிழர் பாணியில் முறுக்கு மீசை வைத்து சுற்றுவதுதான் சந்திரசேகர் ஆசாத் ஸ்டைல். தலித் மக்களின் தலைவரான இவர், அதற்கு ஏற்றபடி நீல நிற துண்டு அணிந்து இருப்பார். எப்போது ஒரு ரேபன் கண்ணாடியும் அணிந்து இருப்பார். கொஞ்சம் தாடியும் இருக்கும் .

தலித் புரட்சி
சிறு வயதில் இருந்தே தலித் மக்களும், உத்தர பிரதேசத்தில் சிறு பான்மையினரும் படும் கஷ்டத்தை பார்த்து, இவர் தலித் மக்களுக்காக குரல் கொடுக்க தொடங்கினார். சட்டம் படித்த காலத்திலேயே இவர் தலித் மக்கள் விடுதலைக்காக சாலையில் இறங்கி போராடி உள்ளார். அப்போது தொடங்கிய இவரின் பயணம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அம்பேத்கார் நிலைப்பாடு
1986ல் உத்தர பிரதேசத்தில் பிறந்த இவர், மிக தீவிரமாக அம்பேத்கார் பின்தொடர்ப்பாளர். இவர் சட்டம் படித்ததே அம்பேத்கார் பிடித்து போய்தான். இவர் கிராமம் மொத்தமும் தலித் மக்கள் அதிகம் உள்ள பகுதி. அங்கு ராஜ்பூட் எனப்படும் ஆதிக்க ஜாதியினர் செய்த கொடுமைகளை பார்த்து கொதித்தெழுந்தனர். அப்போதுதான் இவர் பொது வாழ்க்கை தொடங்கியது.

பீம் ஆர்மி
இந்த பொது வாழ்க்கை பின், பீம் ஆர்மியை உருவாக்கியது. சந்திரசேகர் ஆசாத், சதிஷ் குமார், வினய் ரத்தன் சிங் ஆகியோர் இணைந்து 2014ல் பீம் ஆர்மியை உருவாக்கினார்கள். இதில் தற்போது 1 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தலித் மக்களுக்கு இலவச பள்ளிக்கூடம் கட்டுவது, படிப்பகம் கட்டுவது என்று இவர் பணிகளை செய்து வருகிறார்.

பள்ளிக்கூடம்
உத்தர பிரதேசத்தில் மட்டுமே 350 இலவச சிறுபணியினர் மற்றும் தலித் பள்ளிக்கூடங்களை இவர் நடத்தி வருகிறார்கள். அனைத்து பள்ளிக்கூடத்திற்கு ஒரே பெயர்தான்.. பி.ஆர் அம்பேத்கார்.! இவர் ஒரு பக்கம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இன்னொரு பக்கம் அதிரடி போராட்டங்களுக்கு சொந்தக்காரர்.

அதிரடி
திமிறி எழு, திருப்பி அடி என்பதுதான் இவரின் கோஷமும் கூட. பலமுறை தங்கள் மக்களுக்கு எதிரான அடக்கு முறைக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் போராட்டம் நடத்தி உள்ளார். அதனால்தான் இவரை ராவணன் என்று அழைக்கிறார்கள். 2016ல் இருந்து இவர் 8 முறைக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜ்பூட் மக்களுக்கு எதிராக இவர் செய்த போராட்டம் கலவரத்தில் முடிய, ஸ்பெஷல் போர்ஸ் வந்து இவரை கைது செய்த கதை எல்லாம் நடந்தது.

கொஞ்சம் பயம்
இவரை எப்போது பார்த்தாலும் அம்மாநில முதல்வர் ஆதித்யாநாத்திற்கு கொஞ்சம் பயம். அதனால்தான் என்னவோ, யோகி ஆட்சியில் மட்டும் இவர் 6 முறை கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டம் எல்லாம் இவர் மீது பாய்ந்துள்ளது. ஆனால் சட்டம் தெரிந்த இவர், அனைத்தையும் தாண்டி தொடர்ந்து போராடி வருகிறார்.

தேர்தல்
டெல்லியில் இவர் நடத்திய சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் 1 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அன்று அவர் கைதும் செய்யப்பட்டார். இணையம் முழுக்க இவர் வேகமாக வளர்ந்து வருகிறார். சிஏஏ எதிர்ப்பை மையமாக வைத்து தேசிய அளவில் இவர் கட்சி தொடங்கும் திட்டத்தில் இருக்கிறார். விரைவில் தேர்தலில் நிற்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications