உற்சாக வெள்ளத்தில் பாஜக.. 25-ம் தேதி வெற்றி சான்றிதழ்களுடன் டெல்லி வர எம்.பி-க்களுக்கு அழைப்பு
டெல்லி: மக்களவைத் தேர்தல் முன்னிலை நிலவரங்களின் படி மத்தியில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இத்தேர்தலில் வெற்றி பெறும் பாஜ வேட்பாளர்கள், தங்களது வெற்றி சான்றிதழ்களுடன் டெல்லிக்கு வர அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சுமார் 345-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. மேலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டிலும் அதிக இடங்களில் பாரதிய ஜனதா தனித்தே முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. இதனை கொண்டாடி வரும் அக்கட்சி, பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிகளை எப்போது நடத்தலாம் என அடுத்த கட்ட வேலைகளில் உற்சாகமாக இறங்கியுள்ளது. இதற்கான தீவிர நடவடிக்கைகளில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் இரவுக்குள் முழுமையாக தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும்.
இந்நிலையில் அடுத்த வாரம் புதிய அரசு பதவியேற்பு விழாவை நடத்தி முடிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ம்களவை தேர்தலில் வெற்றி பெறும் பாஜக வேட்பாளர்கள், தத்தம் வெற்றி சான்றிதழ்களை எடுத்து கொண்டு வரும் 25-ம் தேதி டெல்லிக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது.
பின்னர் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதற்கு ஒப்புதல் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் கையெழுத்திடும் கடிதத்தை வைத்து குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க மோடி உரிமை கோர திட்டமிட்டுள்ளார்.
பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்பதலை பெற்று மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது . அனேகமாக இம்முறை மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் பல பது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது












Click it and Unblock the Notifications