டெல்லியில் ஏன் தோற்றோம்.. எப்படி தோற்றோம்.. நட்டா தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை
டெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு மோசமானதொரு தோல்வி ஏற்பட்டுள்ளது. அதுவும் மத்தியில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தும்போதே, அவர்களுக்கு இந்த நிலை உருவாகியுள்ளது.
இந்த தோல்விக்குப் பின்னர் கட்சிக்குள் இயல்பாகவே சலசலப்பு தொடங்கியது. இந்த நிலையில்தான், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் டெல்லி பாஜக தலைவர், மனோஜ் திவாரியும் கலந்து கொள்கிறார். கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், மனோஜ் திவாரி தோல்விக்கான காரணங்களை விளக்கி கூறுவார் என்று கூறப்படுகிறது.
பாஜக தோல்வியடைந்து, மனோஜ் திவாரி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் கட்சி மேலிடமோ இதை ஏற்கவில்லை. பதவியில் தொடருமாறு வலியுறுத்தியது.
இந்த சந்திப்புக்குப் பிறகு, மனோஜ் திவாரி டெல்லி பாஜகவின் அனைத்து நிர்வாகிகளின் கூட்டத்திற்கு நாளை அழைப்புவிடுத்துள்ளார். இந்த கூட்டம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும். இதற்குப் பிறகு மனோஜ் திவாரி, டெல்லி கள நிலவரம் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது.
பிப்ரவரி 11 ம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதில் மகத்தான வெற்றியைப் பெற்றது. டெல்லியில் 70 இடங்களில், 62 இடங்களை கைப்பற்றியது. அதே நேரத்தில், 8 இடங்களை மட்டுமே வென்றது பாஜக. கடந்த முறை போலவே, இந்த முறையும் காங்கிரஸ் பூஜ்யம். அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்த வாக்குகளில் 53.6 சதவீதமும், பாஜகவுக்கு 38.5 சதவீத வாக்குகளும் கிடைத்தன. காங்கிரஸின் பங்கு 4.26 சதவீதம் மட்டுமே.