பட்ஜெட் 2021.. ஆரம்பமே அசத்தல்.. 140 கோடியை மிச்சம் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி: சுதந்திர இந்தியா வரலாற்றில் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்பித்து சாதித்துள்ளார்.
காகிதம் இல்லாத பட்ஜெட் காரணமாக அரசுக்கு 140 கோடியை சேமித்துள்ளார். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தது குறித்து பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் கூறுகையில், முன்னெப்போதும் இல்லாத சூழலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். லாக்டவுனால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் அமல்படுத்தப்படாவிட்டால் நாம் பெரும் சேதத்தை சந்திக்க நேர்ந்திருக்கும் என்றார்.
காகிதம் இல்லாத பட்ஜெட் என்பதால் அனைத்து எம்பிக்களுக்கும் டிஜிட்டல் வடிவில் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் வாசிக்கும் பட்ஜெட்டை எம்பிக்கள் கவனித்து வருகிறார்கள். துறை வாரியாக ஒதுக்கப்படும் நிதிகள் குறித்தும் நிர்மலா சீதாராமன் விவரித்து வருகிறார்.
காகிதத்தில் பட்ஜெட்டை வெளியிட்டால் சுமார் 140 கோடி செலவாகும் என்கிற நிலையில், அந்த செலவை நிர்மலா சீதாராமன் தவிர்த்துள்ளார். அத்துடன் சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.