4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தல்.. 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு
டெல்லி: குஜராத், பஞ்சாப், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கி இருக்கிறது. இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் சட்டசபை தொகுதி அல்லது நாடாளுமன்ற தொகுதி காலியானால் அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாகும். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில், காடி தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த கார்சந்த்பாய் பஞ்சாபாய் சோலங்கி மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாக உள்ளது.

மற்றொரு தொகுதியான விஸ்வதாரின் எம்எல்ஏ பயானி பூபேந்திர கந்துபாய், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் கேரளாவின் நிலாம்பூர் தொகுதியின் எம்எல்ஏ பி.வி. அன்வர் ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா தொகுதி எம்எல்ஏ குர்பிரீத் பஸ்ஸி கோகி மற்றும் மேற்குவங்கத்தின் காளிகஞ்ச் எம்எல்ஏ நஸிருதீன் அஹமது ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த 4 மாநிலங்களிலும் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 19ஆம் தேதியான இன்று இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் சில வாரங்களுக்கு முன்பாக அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இருக்கிறது. காலை முதலே கட்சியினர் பலரும் வாக்களிக்க வரிசையில் நின்று வருகின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள் ஜூன் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications