கெஜ்ரிவாலுக்கு அடி மேல் அடி.. ED யை தொடர்ந்து சிபிஐயும் கைது செய்தது.. ஆம் ஆத்மி அதிர்ச்சி!
டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சிபிஐ கைது செய்தது. முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க இடைக்கால தடை விதித்து இருந்தது.
டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இவரது ஆட்சியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சிபிஐயும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு கடந்த மே மாதம் 10 ஆம் தேதி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கடந்த 2 ஆம் தேதியுடன் ஜாமீன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து கெஜ்ரிவால் ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு விசாரணையின் போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கின் குற்றவாளிகளுடன் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருந்ததாக அமலாக்கத்துறை வாதிட்டது. கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என வாதிட்டார்.
விசாரணை முடிவில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கெஜ்ரிவாலை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கை விசாரித்து வந்த சிபிஐயும் தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications