இந்திய நீதித்துறையில் முதல்முறை.... அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு
டெல்லி: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான காள அளவை உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி நீட்டித்து ஊழலில் ஈடுபட்ட புகாரில் சிக்கினார். இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சிபிஐ வெள்ளிக்கிழமையன்று வழக்குப் பதிவு செய்தது.
2017-18ஆம் ஆண்டில் லக்னோவில் உள்ள ஜி.சி.ஆர்.ஜி இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது. ஆனால் இந்த உத்தரவு வெளியான சில நாட்களுக்கு பிறகு, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதி எஸ்.என்.சுக்லா லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்த உத்தரவில் மாற்றங்களை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது பற்றி வந்த புகாரையடுத்து உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய உள் விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட, நீதிபதிகள் குழு, 2017ம் ஆண்டில் கொடுத்த அறிக்கையில், சுக்லா மீதான குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக தெரிவித்தது.

தலைமை நீதிபதி கடிதம்
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் இவரை நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருமாறு அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் மோடி கடிதம் எழுதியிருந்தார்.

தலைமை நீதிபதி அனுமதி
இதற்கிடையில் சிட்டிங் நீதிபதி மீது தலைமை நீதிபதியின் அனுமதியின்றி சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியாது என்பது சட்டம். எனவே, உயர்நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து சுக்லா மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு முந்தைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி அளித்தார்.

நீதிபதி மீது வழக்கு
இதன் அடிப்படையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கிரிமினல் சதி வேலைகளில் ஈடுபட்டது, பதவியை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமனறம்
முன்னதாக பதவி விலகுமாறு முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வலியுறுத்திய நிலையில், சுக்லா பதவி விலக மறுத்தார். இதையடுத்து, 2018 ல் நீதித்துறை பணிகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டன. பெயருக்கு மட்டுமே அவர் நீதிபதியாக இருக்கிறார். அவரை பதவியில் இருந்து விலக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே முடியும் என்பதால் அந்த நடவடிக்கை விரைவில் துவங்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications