DHFL: நாட்டின் மிகப்பெரிய நிதி மோசடி.. டிஹெச்எப்எல் மீது பகீர் குற்றச்சாட்டு
Recommended Video

டெல்லி: புலனாய்வு ஆங்கில வெப்சைட்டான, 'கோப்ராபோஸ்ட்' டிஹெச்எப்எல் நிறுவனம் 31,000 கோடி அளவுக்கு வங்கி நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய நிதி மோசடி இது என்று கோப்ராபோஸ்ட் தெரிவித்துள்ளது. முறைகேடுளுக்கு நடுவே பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு டிஹெச்எப்எல் நிறுவனம் நன்கொடை வழங்கி வந்துள்ளது.
பாஜகவிற்கு மட்டும் ரூ.19.5 கோடி நன்கொடையாக இந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.

டிஹெச்எப்எல் மோசடி
லாபம் ஈட்டும் நிறுவனங்கள் தங்களது கடந்த 3 ஆண்டுகால கட்டத்தின், நிகர லாபத்தில் 7.5% அளவுக்கு மட்டுமே நன்கொட வழங்க முடியும் என்பது சட்டம். ஆனால் பாஜகவோ டிஹெச்எப்எல், ஆர்கேடபிள்யூ டெவலப்பர்ஸ், ஸ்கில் ரியலேட்டர்ஸ் மற்றும் தர்ஷன் டெவலப்பர்ஸ் போன்ற நஷ்டத்தில் உள்ள நிறுவனங்களிடம் அல்லது, நன்கொடையைவிட லாபம் குறைவாக கொண்ட நிறுவனங்களிடம், பாஜக எப்படி நன்கொடை பெற்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கிகளிடம் கடன்
டிஹெச்எப்எல் குரூப்பின் கடன் அளவு ரூ.97,000 கோடி என்று கோப்ராபோஸ்ட் கூறுகிறது. இதில் வங்கிகளிடம் வாங்கிய கடன் மட்டும் 50,000 கோடி ரூபாய். எஸ்பிஐ வங்கிடமிருந்து மட்டும் இதில், 11,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கியுள்ளதாகவும் கோப்ராபோஸ்ட் கூறுகிறது. டிஹெச்எப்எல், நிறுவனம், ஷெல் எனப்படும் செயல்படாத போலி நிறுவனங்களுக்கும், குடிசைமாற்று திட்டங்களுக்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லாமல், கடன் வழங்கியுள்ளது.

போலி நிறுவனங்கள்
பணத்தை மோசடியாக திருப்பி விடுவதற்காக 45 நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு 14,282 கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 34 நிறுவனங்கள் பெற்றுள்ள சுமார் ரூ.10,500 கோடிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. அதில், 11 நிறுவனங்கள் ஷகானா குழுமத்துக்குச் சொந்தமானவை. அவை 3,800 கோடியை கடனாகப் பெற்றுள்ளன.

போலி தணிக்கை
இந்த 34 நிறுவனங்களுக்கும் தொழில் செய்யாமல் வருமானம் இல்லாமல் இருக்கக்கூடிய நிறுவனங்கள்தான். 1 லட்ச ரூபாய் முதலீட்டில் மட்டுமே இவை தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், பெரிய அளவுக்கு வணிகம் நடைபெற்றது போன்று போலியாக ஆடிட்டரால் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவற்றுக்கு ஒரே முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது மற்றொரு அதிர்ச்சியாகும். இந்த நிறுவனங்கள் மூலமாக, இந்தியாவிலும், பிற நாடுகளிலும் டிஹெச்எப்எல் முதலீடு செய்துள்ளது. மோசடி பணத்தில் இலங்கையில் கிரிக்கெட் அணி ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது.

அரசியல் தொடர்புகள்
இந்த மோசடியில் அரசியல் தொடர்புகள் உள்ளன. ஷகானா குரூப்பின் முக்கிய பங்குதாரர், சிவசேனா கட்சி எம்எல்ஏவான தல்வி ஷிவராம் கோபால் ஆகும். குஜராத்தை சேர்ந்த பல்வேறு கம்பெனிகளுக்குதான், ரூ.1160 கோடி அளவுக்கான கடன்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. குஜராத் சட்டசபை தேர்தல் காலத்தில்தான் இந்த நிதி சென்றுள்ளது. கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நெருங்கும்போதுதான், அங்குள்ள சில நிறுவனங்களுக்கு ரூ.1,320 கோடி கடனாக சென்றுள்ளது. இதனிடையே, இந்த குற்றச்சாட்டை, டிஹெச்எப்எல் மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications