இலங்கை மக்களுக்கு உதவுங்க.. இந்திய அரசையும் சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொண்ட சோனியா காந்தி!
டெல்லி : நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் கடும் நெருக்கடியான அரசியல் சூழல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை விடுத்துள்ளார்.
அதில், இலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்குமாறு சர்வதேச சமூகத்திற்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 9-ஆம் தேதி எழுந்த மக்கள் கிளர்ச்சியால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். இந்நிலையில், பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக மீண்டும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தப்பிச் சென்ற கோத்தபய
நேற்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் கொழும்புவில் நடைபெற்ற போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து போராட்டக்காரர்கள் திரண்டனர். பொதுமக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது மாளிகையிலிருந்து தப்பிச் சென்றார்.

கைப்பற்றிய போராட்டக்காரர்கள்
பின்னர் அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் இருக்கும் நீச்சல் குளங்களில் குளித்து விளையாடினர். மேலும், அதிபர் மாளிகைக்குள் புகுந்து ஒவ்வொரு அறைகளிலும் நுழைந்து ஆரவாரம் செய்தனர். படுக்கை அறைகளில் படுத்தும், சமையலறையில் சாப்பிட்டும், விளையாடியும் மகிழ்ந்தனர். தரைக்கு அடியில் இருந்த ரகசிய அறைக்கும் சென்று கோத்தபய ராஜபக்சவை தேடினர். இரவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

பதவி விலக ஒப்புதல்
அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்ச, வரும் 13ஆம் தேதி பதவி விலக ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் ராஜினாமா செய்தார். இதனால் 30 நாட்கள் சபாநாயகர் அதிபராக பதவி வகிப்பார் எனக் கூறப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள போராட்டங்களால் அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்பதில் குழப்பமான நிலையில் உள்ளது.

சோனியா காந்தி
இந்நிலையில், இலங்கையில் நிலவி வரும் நெருக்கடியான அரசியல் சூழல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை விடுத்துள்ளார். சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி கவலையுடன் கவனித்து வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியான சூழலில் அந்நாட்டு மக்களுடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீண்டு வரும்
மேலும், இலங்கை சந்தித்து வரும் பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்களிடையே பெரிய அளவில் பாதிப்பும், மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. இலங்கை மக்கள் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகம்
மேலும், இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வரும் இலங்கை அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம். அதேபோன்று சர்வதேச சமூகமும் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்க வேண்டும்" என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications