டூல்கிட் சர்ச்சை..போலி தகவல்..11 அமைச்சர்கள் ட்வீட்களில் "Manipulated" முத்திரை.. காங். வலியுறுத்தல்
டெல்லி: டூல்கிட் சர்ச்சையில், அதனைப் பகிர்ந்த 11 மத்திய பாஜக அமைச்சர்கள் மீதும் "Manipulated media" என்ற டேக்கை இணைக்க வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சம் வரை சென்றது. அதேபோல கொரோனா உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை சென்றது.
மேலும், நாட்டில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.. கொரோனாவால் மக்கள் ஒருபுறம் உயிரிழந்தனர் என்றால், சரியான சிகிச்சை கிடைக்காமலும் மறுபுறம் நோயாளிகள் உயிரிழந்தனர்.

கடும் விமர்சனம்
இது பாஜகவுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிறது. மேலும், வல்லுநர்கள் பலமுறை எச்சரித்தும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களிலும் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டூல்கிட் சர்ச்சை
இந்நிலையில், பாஜக மற்றும் பிரதமர் மோடியின் பிம்பத்தைக் கெடுக்கக் காங்கிரஸ் சமூக வலைத்தளங்களில் முயன்று வருவதாகவும் இதற்காகத் தனியாகவே ஒரு டூல்கிட்டையும் காங்கிரஸ் உருவாக்கி உள்ளதாக பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் நற்பெயரை வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுடன் இணைந்து கெடுக்க முயல்வதாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

ட்விட்டர் நடவடிக்கை
மத்திய அமைச்சர்கள் உட்பட பல பாஜக தலைவர்களும் இந்த டூல்கிட்-ஐ பகிர்ந்தனர். ஆனால் இதைக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், இது தொடர்பாகக் காங்கிரஸ் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளது. இந்நிலையில், சம்பித் பத்ரா உள்ளிட்ட சில பாஜக தலைவர்களின் ட்வீட்களில் "manipulated media" என்ற டேக்கையும் ட்விட்டர் நிறுவனம் இணைத்திருந்தது. பொதுவாகப் போலி செய்திகளைக் கொண்டிருக்கும் ட்வீட்களில் தான் இது போன்ற டேக் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கடிதம்
இந்நிலையில், இந்த டூல்கிட்டை பகிர்ந்த 11 அமைச்சர்களின் ட்வீட்களிலும் "manipulated media" என்ற டேக்கை இணைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கடிதம் எழுதியுள்ளார். ரன்தீப் சுர்ஜேவாலா தனது கடிதத்தில், "ஒரு தகவலை யார் கூறுகின்றனர் என்பதன் அடிப்படையிலேயே மக்கள் அதனை நம்புகின்றனர். மத்திய அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவலையும் மக்கள் உண்மை என்றே கருதுவார்கள்.

11 அமைச்சர்கள்
எனவே, போலி தகவலைப் பகிர்ந்த அனைத்து அமைச்சர்களின் ட்வீட்களிலும் "manipulated media" என்ற டேக் இணைக்கப்பட வேண்டும். அமைச்சராக இருந்தாலும், சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சுர்ஜேவாலா எழுதியுள்ள இந்தக் கடிதத்தில் மத்திய அமைச்சர்களான கிரியாஜ் சிங், பியூஷ் கோயல், ஸ்மிருதி இராணி, ரவிசங்கர் பிரசாத், பிரஹ்லாத் ஜோஷி, தர்மேந்திர பிரதான், ரமேஷ் போக்ரியால், தவார்சந்த் கெஹ்லோட், ஹர்ஷ் வர்தன், முக்தர் அபாஸ் நாக்ராவி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications