வருமான வரியை அரசு உயர்த்த போகிறது.. வதந்தி பரப்பிய 3 ஐஆர்எஸ் அதிகாரிகள்.. பாய்ந்தது நடவடிக்கை!
கொரோனாவிற்காக மத்திய அரசு வருமான வரியை உயர்த்த போவதாக ரிப்போர்ட் வெளியிட்ட ஐஆர்எஸ் அதிகாரிகள் 3 பேர் மீது மத்திய நேரடி வரி வாரியம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: கொரோனாவிற்காக மத்திய அரசு வருமான வரியை உயர்த்த போவதாக ரிப்போர்ட் வெளியிட்ட ஐஆர்எஸ் அதிகாரிகள் 3 பேர் மீது மத்திய நேரடி வரி வாரியம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவின் பொருளாதரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வர இந்தியா கடுமையாக முயன்று கொண்டு இருக்கிறது. இதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளிக்கும் விதமான மத்திய அரசு வருமான வரியை உயர்த்த போவதாக ஐஆர்எஸ் அதிகாரிகள் 3 பேர் ரிப்போர்ட் வெளியிட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி சஞ்சய் பகதூர் (முதன்மை இயக்குனர், விசாரணை பிரிவு, வடகிழக்கு பகுதி), பிரகாஷ் துபே(இயக்குனர் டிஓபிடி, ஐஆர்எஸ் சங்கத்தின் இணை செயலாளர்) மற்றும் பிரஷாந்த் பூஷன் (வருமான வரி முதன்மை ஆணையர், டெல்லி மற்றும் ஐஆர்எஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர்) ஆகிய மூன்று பேரும் இந்த செயலை செய்துள்ளனர். இவர்களின் செயல் குறித்து இன்னும் 15 நாட்களுக்குள் இவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி இந்த மூன்று அதிகாரிகளும் தங்களுக்கு கீழ் பணியாற்றும் இளம் ஐஆர்எஸ் அதிகாரிகளை கொண்டு குழு ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். போர்ஸ் - FORCE (Fiscal Options & Response to the COVID-19 Epidemic) என்ற குழு மூலம் ரிப்போர்ட் ஒன்றை தயார் செய்துள்ளனர். அந்த ரிப்போர்ட்டில் கூடுதல் வரி விதிப்பு, பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிப்பு, பரம்பரை வரி விதிப்பு, கொரோனா வரி விதிப்பு என்று நிறைய வரி விதிப்பு முறைகளை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். வரியை உயர்த்த வேண்டும் என்று அவர்கள் இதில் கூறியுள்ளனர்.
சஞ்சய் பகதூர் மற்றும் பிரகாஷ் துபே இருவருக்கும் தங்களுக்கு கீழ் இருந்த 60க்கும் அதிகமான அதிகாரிகள் உதவியுடன் இந்த ரிப்போர்ட்டை உருவாக்கி உள்ளனர். அதன்பின் ஐஆர்எஸ் அதிகாரி பிரஷாந்த் பூஷன் இந்த ரிப்போர்ட்டை பொதுவில் வெளியிட்டு, மத்திய அரசு இந்த திட்டங்களை அமல்படுத்த உள்ளது என்று வதந்தி பரப்பி உள்ளார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
மக்கள் இடையே இந்த ரிப்போர்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு வருமான வரியை உயர்த்த போவதாக ரிப்போர்ட் வெளியிட்ட இந்த ஐஆர்எஸ் அதிகாரிகள் 3 பேர் மீதும் மத்திய நேரடி வரி வாரியம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
மத்திய நேரடி வரி வாரியம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுக்கு ஐஏஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் என்ன விதமான அறிவுரை சொன்னாலும் அதை பரிசீலனை செய்வோம். ஆனால் இவர்கள் இந்த ரிப்போர்ட்டை அரசுக்கு அனுப்பாமல் பொதுவில் வெளியிட்டு இருக்கிறார்கள். உயர் அதிகாரிகள் இப்படி செய்தது தவறு. பொருளாதார நிலை சரியில்லாத போது இவர்கள் இப்படி செய்திருக்க கூடாது .
அவர்களின் ரிப்போர்ட்டுக்கும் அரசின் கொள்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது நிதி அமைச்சகத்தின் முடிவும் இல்லை. இது தொடர்பாக விசாரித்து வருகிறோம், நாங்கள் இந்த ரிப்போர்ட்டை தயாரிக்கும்படி. கூறவில்லை. சொத்து வரி கொண்டு வர வேண்டும், வரி விதிப்பை 40% உயர்த்த வேண்டும் என்றெல்லாம் அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. அப்படி எங்களுக்கு எந்த திட்டமும் இல்லை. நாங்கள் இது குறித்து திட்டமிடவும் இல்லை, யாருக்கும் உத்தரவிடவும் இல்லை. மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications