இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்.. டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்.. குற்றச்சதி வழக்கு பதிவு!
டெல்லி: இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒரு அணியாகவும் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்படத் தொடங்கினர்.
அப்போது, இரு தரப்பிலுமே அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்குத்தான் சொந்தமானது என்று தேர்தல் ஆணையத்தில் உரிமை கோரப்பட்டது.

சின்னம்
இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை, முடக்குவதாக, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு, ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் சில அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்தக் குற்றச்சாட்டின் பேரில், தினகரன், கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

அதிரடி
இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 17ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டார் நீதிபதி அருண் பரத்வாஜ். குற்றச்சாட்டு பதிவு செய்யக்கூடிய டிசம்பர் 4ம் தேதி தினகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
|
நேரில் ஆஜர்
இந்த உத்தரவை ஏற்று பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று தினகரன் நேரில் ஆஜரானார். அப்போது சட்டப்பிரிவு 120பி (குற்றச் சதி) பிரிவு 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கையெழுத்திட்டார்
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்து இட்டு பிறகு கிளம்பிச்சென்றார் தினகரன். இந்த வழக்கின், விசாரணை டிசம்பர் 17-ம் தேதி முதல் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது. இதனால் தினகரனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications