'யாரெல்லாம் தேச விரோதிகள் தெரியுமா.. கேரளா தொடங்கி ஜேஎன்யு மாணவர்கள் வரை..' லிஸ்ட் போட்ட பாஜக எம்பி
டெல்லி: முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் எல்லாம் வன்முறை அதிகரிக்கும் என்று சர்ச்சை கிளப்பும் வகையில் பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்புவோரின் உடலில் ஓடுவது இந்திய ரத்தமே இல்லை என்றும் சாடியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் ராஜீவ் சவுக்கில் உள்ள மத்திய பூங்காவில் "மலபார் இந்து இனப்படுகொலையின்" 100ஆவது ஆண்டின் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெற்கு டெல்லி மக்களவை உறுப்பினர் ரமேஷ் பிதுரி கலந்து கொண்டார்.

வன்முறை இருக்கும்
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரமேஷ் பிதுரி முஸ்லிம்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தலைவர்கள் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பேசிய ரமேஷ் பிதுரி, "எந்தெந்த இடங்களில் எல்லாம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனரோ. அந்தந்த இடங்களில் எல்லாம் வன்முறை அதிகமாக உள்ளது. அந்த இடங்களில் எல்லாம் போர் இருக்கும்.

பாகிஸ்தான் பிரதமரே!
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் இடங்களில், அவர்கள் மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள். பாகிஸ்தான் பிரதமர் [இம்ரான் கான்] சிறுபான்மையினர் உரிமைகள் பற்றி உலக நாடுகளுக்குப் பாடம் நடத்துகிறார். நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன், பாகிஸ்தான் நாட்டில் இந்துக்களின் மக்கள் தொகை 26%இல் இருந்து 2.5 சதவீதமாகக் குறைந்ததுள்ளது. உங்கள் நாட்டில் இந்துக்கள் எங்கே போனார்கள்? உலக நாடுகளுக்குச் சிறுபான்மையினர் நலன் குறித்து படம் எடுக்கும் நீங்கள் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்.

தேச விரோதிகள்
கேரளா இருப்போர், ஜேஎன்யுவில் படிப்பவர்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்தியாவைத் துண்டாக்க வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. இதற்காக பல்வேறு தேச விரோத முழக்கங்களை எழுப்புகிறார்கள். அந்த தேச விரோதிகளின் உடலில் ஓடுவது இந்திய ரத்தமே இல்லை. அவர்கள் உடலில் அவுரங்கசீப் மற்றும் பாபரின் ரத்தம் தான் ஓடுகிறது" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவர்கள் தேச துரோகிகள் என்றும் சாடினார்.

தொடரும் சர்ச்சைகள்
பாஜகவின் முக்கிய தலைவர்கள் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். முன்னதாக, குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முந்தைய நாள் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் ரூபானி, "இந்து பெண்களைக் காதலிப்பது போல நடித்து அவர்களைச் சிக்க வைத்து, ஓடி போகும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதைத் தடுக்கவே நாங்கள் 'லவ் ஜிகாத்' என்ற புதிய சட்டத்தையும் கொண்டு வந்தோம். இந்து பெண்களைக் காதல் என்ற பெயரில் இழுத்துச் செல்பவர்களுக்கு எதிராக பாஜக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். அதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம்" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.












Click it and Unblock the Notifications