அவசர மனுவாக விசாரிக்க முடியாது! கை விரித்த டெல்லி ஹைகோர்ட்.. ED காவலில் உள்ள கெஜ்ரிவாலுக்கு ஏமாற்றம்
டெல்லி: அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்ட விரோதம் எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி முறையிட்டார். இந்த நிலையில் வரும் புதன்கிழமை தான் இந்த மனுவை விசாரிக்க முடியும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி முதல்வராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சி தலைவராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. சுமார் 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர் ஆகாமல் இருந்து வந்தார்.
கெஜ்ரிவால் அவசர மனு: இந்த நிலையில், நேற்று முன்தினம் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் வைத்து கெஜ்ரிவாலை விசாரித்து வருகிறது. இந்த நிலையில், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்ட விரோதம் எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை காவலில் எடுத்ததற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். அமலாக்கத்துறை கைது செய்தது மற்றும் காவலில் எடுத்தது என இரண்டுமே சட்ட விரோதம். எனவே, உடனடியாக தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கெஜ்ரிவால் அந்த மனுவில் கூறியுள்ளார்.
புதன்கிழமை தான் விசாரிக்க முடியும்: இந்த நிலையில், இந்த மனுவை வரும் புதன் கிழமை தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, ஹோலி பண்டிகை விடுமுறை வருவதால், விடுமுறைகள் முடிந்து முதல் வேலை நாளான வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முயற்சித்து, சம்மன் அனுப்பியது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து சம்மனுக்கு ஆஜர் ஆகாமல் இருந்து வந்தார். மொத்தம் 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது: இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான நடவடிக்கை பாஜகவின் செயல் என ‛இந்தியா’ கூட்டணி மற்றும், ஆம் ஆத்மி கட்சியினர் விமர்சித்து வந்தனர். மேலும் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம்ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அமலாக்கத்துறை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலிடம் முக்கியமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், எனவே அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன்படி, நீதிமன்றமும், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் வருகிற 28 ஆம் தேதி வரை 6 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கியது.
அமலாக்கத்துறை காவலில்: இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை கஸ்டடிக்கு சென்றார். வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவசர வழக்காக விசாரிக்க கோரி தாக்கல் செய்த இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் வரும் புதன்கிழமை தான் விசாரிக்கும் என்று கை விரித்துள்ளது. இதன் மூலம் அடுத்த 3 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடியில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications