டெல்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு.. கெஜ்ரிவால் அரசு வெற்றி.. ஆப்சென்ட் ஆன 8 எம்எல்ஏக்கள்
டெல்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரம் நடத்தியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று டெல்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆதரவாக 54 வாக்குகள் பதிவாகியது. எனினும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 8 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வென்றுள்ளன. சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை விட அதிக இடங்களில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி வெற்றி பெற்று அசுர பலத்துடன் உள்ளது.

எனினும், டெல்லி மதுபான கொள்கை வழக்கு கெஜ்ரிவாலுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யபட்ட நிலையில் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுவரை 5 முறை அனுப்பிய சம்மன்களுக்கு ஆஜராகாமல் கெஜ்ரிவால் புறக்கணித்து வருகிறார்.
6 வது முறையாக வரும் 19 ஆம் தேதி கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணை என்ற பெயரில் தன்னை அழைத்து கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிடுவதாகவும் தேர்தலுக்கு முன்பாக தன்னை முடக்கும் பாஜகவின் சதி இது எனவும் கெஜ்ரிவால் விமர்சித்து வருகிறார். இதற்கிடையே ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சிலரிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் 25 கோடி வரை கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்றதாகவும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியது பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில், டெல்லி சட்டமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது கெஜ்ரிவால் கூறுகையில், " அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார். அவரது அரசு கவிழும் என பாஜக கூறி வருகிறது. ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் 25 கோடி வரை பேரம் பேசியதாக 2 எம்எல்ஏக்கள் என்னிடம் கூறினர்.
ஆனால் எந்த எம்எல்ஏவும் அணி மாறவில்லை. பல மாநிலங்களில் பொய் வழக்குகளை பதிவு செய்து மாநில கட்சிகளை பாஜக உடைக்கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி தலைவர்களை கைது செய்ய நினைக்கிறார்கள். டெல்லியில் வெற்றி பெற முடியாது என்பதால் ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார்கள். எம்எல்ஏக்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவே நான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளேன்" என்றார்.
இந்த நிலையில் டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக 54 வாக்குகளும் எதிராக ஒரு வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. ஆம் ஆத்மியை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இதனை தொடர்ந்து சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
ஆம் ஆத்மியில் இருந்து ஒரு எம்எல்ஏ கூட பிரிந்து போகவில்லை. எம்.எல்.ஏக்கள் இரண்டு பேருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் 3 பேர் சொந்த பணி காரணங்களால் அவைக்கு வரவில்லை. 2 பேர் சிறை சென்றுள்ளனர். ஒருவர் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். நாட்டின் 3 வது கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லி சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications