புற்றுநோயை குணமாக்க புரோட்டான் சிகிச்சை வசதி தேவை! தீர்மானம் கொண்டு வந்த திமுக எம்.பி.ராஜேஷ்குமார்!
டெல்லி: புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய புரோட்டான் சிகிச்சை வசதியை அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என திமுக எம்.பி. ராஜேஷ்குமார் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வரும் நிலையில் புரோட்டான் சிகிச்சை வசதியின் அவசியம் குறித்து நாடாளுமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக தனது கோரிக்கையை பதிவு செய்திருக்கிறார்.
தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் புரோட்டான் சிகிச்சை முறைகளுக்கு ரூ.25 லட்சம் வரை செலவாவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த சிரமப்படுவதாக ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்திருக்கிறார்.

புற்றுநோய் சிகிச்சை
புற்றுநோய்க்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளில் அட்வான்ஸ்டாக புரோட்டான் சிகிச்சை முறை பார்க்கப்படுகிறது. கீமோதெரபி உள்ளிட்ட மற்ற சிகிச்சை முறைகளை காட்டிலும் புரோட்டான் சிகிச்சை முறையில் துல்லியமான கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் கட்டிகள் மீது அதிக ஆற்றல் செலுத்தப்படுகிறது. எல்லாம் சரி இத்தகைய சிறப்பு வாய்ந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

புரோட்டான் சிகிச்சை மையம்
பணம் இருப்பவர்களுக்கு சரி, கேட்கிற தொகையை கொடுத்து சிகிச்சை பெற்று குணமடைவார்கள். பணம் இல்லாத ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த புற்றுநோயாளிகள் நிலைமை என்னவாகும் என்று யோசித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், புரோட்டான் சிகிச்சை மையங்களை அனைத்து மாநில தலைநகரங்களிலும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என தீர்மானமே கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் கவனம் ஈர்த்திருக்கிறார்.

மாநிலத்திற்கு ஒன்று
தற்போதைய சூழலில் குறைந்தபட்சம் மாநிலத்திற்கு ஒன்று என்ற வீதத்திலாவது புரோட்டான் சிகிச்சை மையங்களை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் ராஜேஷ்குமார் எம்.பி. இது உள்ளபடியே பல்லாயிரக்கணக்கான புற்று நோயாளிகளுக்கு மிகுந்த பயன் தரக்கூடிய ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. தமிழகத்திற்காக மட்டும் குரல் கொடுக்காமல் ஒட்டுமொத்த நாட்டுக்காகவும் திமுக எம்.பி.ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்திருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

திமுக எம்.பி.க்கள்
அண்மைக் காலமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கேள்விகளாலும், தனிநபர் தீர்மானங்களாலும் நாடு தழுவிய அளவில் கவனம் ஈர்த்து வருகின்றனர். கனிமொழி, ராஜேஷ்குமார், எம்.எம்.அப்துல்லா, தமிழச்சி தங்கபாண்டியன், என பலரும் நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருவதை காண முடிகிறது.












Click it and Unblock the Notifications