ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெற்றி யாருக்கு.. பிப். 16 முதல் 27 வரை கருத்துக் கணிப்புகளுக்கு தடை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை வெளியிட தடை
டெல்லி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மாரடைப்பால் இறந்துவிட்டார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார்.

அது போல் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அது போல் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சி இந்தத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிக்கிறது. இந்த தேர்தலில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதியாக இருந்தது. இந்த நிலையில் அமமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வாபஸ் பெற்றுக் கொண்டார்.
மற்ற தேர்தல்களில் கிடைத்த குக்கர் சின்னம் இந்த இடைத்தேர்தலில் தங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் தேர்தலில் போட்டியில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்துவிட்டார். அது போல் பாமக முன்பே இடைத்தேர்தல்களில் நம்பிக்கை இல்லை என அறிவித்துவிட்டது. எனவே 4 முனை போட்டியாக களம் உள்ளது, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக ஆகியவையாகும்.
இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications