ஐபேக் நிறுவனத்தில் ED ரெய்டு! அதிகாரியிடமிருந்து ஆவணங்களை பிடுங்கி சென்றதாக மம்தா மீது குற்றச்சாட்டு
டெல்லி: கொல்கத்தாவில் ஐ-பேக் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர், பிரதீக் ஜெயின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் மம்தா பானர்ஜி குறுக்கீடு செய்து, அதிகாரிகள் பறிமுதல் செய்த ஆவணங்களை பிடுங்கி சென்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, அனூப் மாஜியுடன் தொடர்புடைய ஐ-பேக் அலுவலகம் மற்றும் பிரதீக் ஜெயின் இல்லத்தில் இன்று ரெய்டு நடந்தது. ரெய்டு சமயத்தில், மம்தா தலையிட்டு விசாரணைக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக ரெய்டு நடந்த பிரதீக் ஜெயின் வீட்டுக்கு சென்ற மம்தா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்புடைய சார்ந்த ஹார்ட் டிஸ்க்குகள், ஆவணங்கள், முக்கியத் தரவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்வதாகக் குற்றம்சாட்டியிருந்தார். வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இச்சோதனைகள் நடத்தப்பட்டிருக்கிறது என்றும், ரெய்டு அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் விமர்சித்திருந்தார்.
இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில், "மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஏராளமான காவல்துறை அதிகாரிகளுடன் வருவதற்கு முன்புவரை, ரெய்டு நடவடிக்கைகள் அமைதியாகவும், தொழில்ரீதியாகவும் நடைபெற்றன. ஆனால், மம்தா நுழைந்து, முக்கிய ஆவணங்களையும், மின்னணு சாதனங்களையும் எடுத்துச் சென்றார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "முதல்வரின் வாகனம் ஐ-பேக் அலுவலகத்திற்குச் சென்றது. அங்கிருந்தும் மம்தா, அவரது உதவியாளர்கள், மாநிலக் காவல்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களையும், மின்னணு ஆதாரங்களையும் வலுக்கட்டாயமாக எடுத்து சென்றனர். இந்தச் செயல்கள், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடக்கும் விசாரணைகளுக்கு தடையை ஏற்படுத்தியுள்ளது" எனக் கூறியுள்ளது.
அனூப் மாஜி தலைமையிலான சட்டவிரோத நிலக்கரி கடத்தல் தொடர்பாக, அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் 6, டெல்லியில் 4 இடங்கள் என மொத்தம் 10 இடங்களில் ரெய்டு மேற்கொண்டது.
இந்த ரெய்டில் சட்டவிரோத நிலக்கரி கடத்தல், நிதி வருவாய், ஹவாலா பரிமாற்றம் தொடர்பான வழக்குடன் இணைந்தவை என்றும், எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லாதவை என்றும் அமலாக்கத்துறை தெளிவுபடுத்தியது. இச்சோதனைகள் தேர்தலுடன் தொடர்பில்லாதவை பணமோசடிக்கு எதிரான ஒரு வழக்கமான நடவடிக்கையே என்றும் அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது.












Click it and Unblock the Notifications