யுவராஜ் சிங் + உத்தப்பா + சோனுசூட் உள்பட பிரபலங்களின் சொத்துகள் முடக்கம்- அமலாக்கத்துறை அதிரடி
டெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலிகளை புரோமோஷன் செய்த வழக்கில் பல பிரபலங்களின் சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, நடிகர்கள் சோனுசூட், அங்குஷ் ஹஸ்ரா, நடிகைகள் ஊர்வசி ரவுடேலா , நேகா சர்மா உள்பட பலரது சொத்துகளை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கம் செய்துள்ளது.
நம் நாட்டில் 1xBet, 1xBat உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட செயலிகளை சட்டவிரோதமாக செயல்பட பல பிரபலங்கள் சப்போர்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் அந்த நிறுவனம் அதிகப்படியான பணத்தை சம்பாதித்துள்ளதாகவும், அதில் இருந்து சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்களுக்கு பணம் கைமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக வெளிநாட்டு இடைத்தரகர்கள் மூலமாக பிரபலங்களுக்கு பணம் சென்றுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை மறைப்பதற்காக layered transactions மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அமலாக்கத்துறையும் உள்ளே நுழைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் நேற்று அமலாக்கத்தறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலிகளை பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்ட புகாரில் நடிகைகள் ஊர்வசி ரவுடேலா, நேகா சர்மா, நடிகர்கள் சோனு சூட், அங்குஷ் ஹஸ்ரா, மிமி சக்ரவர்த்தி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா உள்ளிட்டோரின் சொத்துகள் இன்று அதிரடியாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் ரூ.7.93 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்எல்ஏ எனும் பணமோசடி தடுப்புச் சட்டம், 2002-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிரபலங்களின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலரது சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்குச் சொந்தமான ரூ.11.14 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதன்மூலம் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முடக்கிய சொத்து மதிப்பு ரூ.19.07 கோடியாக உள்ளது.
மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வுருகிறது. இதனால் வரும் நாட்களில் இன்னும் பல பிரபலங்களின் சொத்துகள் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை வார்னிங் செய்துள்ளது. எந்த காரணம் கொண்டும் இந்தியாவில் சட்டவிரோத சூதாட்ட செயலி, சூதாட்ட இணையதளங்களை விளம்பரங்கள் வாயிலாக பிரபலங்கள் ஊக்குவிப்பு செய்யக்கூடாது. இதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வார்னிங் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications