மத ரீதியில் பிரச்சாரம்.. மோடிக்கு எதிராக புகார்.. நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு
டெல்லி: வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவதை மதரீதியில் விமர்சனம் செய்ததாக பிரதமர் மோடிக்கு எதிராக எழுந்துள்ள புகாருக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது
மதம் சார்ந்த தேர்தல் பிரசாரத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தோல்வி ஏற்படும் என்ற பயம் காரணமாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தேர்தல் விதிமுறை மீறல்
இந்த நிலையில், கடந்த 1 ம் தேதி வார்தாவில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வயநாடு தொகுதியில் சிறுபான்மை இன மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்களை நம்பித்தான், ராகுல் வயநாடு தொகுதிக்கு சென்றுள்ளதாக கூறினார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பேச்சு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திட்டமிட்டு பிரச்சாரம்
சாதி, மதத்தை குறிப்பிட்டு யாரும் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிகளில் ஒன்றாகும். இதனை, கண்டு கொள்ளாமல் பிரதமர் மோடி திட்டமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் புகார்
மேலும், இந்துக்களை காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது என்றும், இந்து பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதை ஏற்க இயலாது என்றும் மோடி பேசியதாகவும், குறிப்பிட்டு காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம்
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரத்துக்கு விளக்கம் கேட்டு பிரதமர் மோடிக்கும், மகாராஷ்டிரா மாநில தேர்தல் அதிகாரிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications