வந்தாச்சு.. ம.பி. தெலுங்கானா உட்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு.. டிச. 3ல் வாக்கு எண்ணிக்கை
டெல்லி: 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபைத் தேர்தல் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. குறிப்பாக காங்கிரஸ் வலுவான வெற்றியை சத்தீஸ்கரில் பெற்றது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில தொகுதிகள் வித்தியாசத்திலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக செய்த ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா முதலமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு தாவினார். அதன் தொடர்ச்சியாக பாஜக அங்கு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ராஜஸ்தானிலும் முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் வெடித்தது. சச்சின் பைலட் பல முறை போர்க்கொடி தூக்கினாலும், காங்கிரசின் தேசிய தலைமையின் தலையீடு காரணமாக ஆட்சி கவிழாமல் தொடர்கிறது. இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகளின் ஆட்சி காலம் நிறைவடைகிறது.
இந்த மாநிலங்களைபோல் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் நவம்பர் இறுதியில் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜொராம்தங்கா தலைமையிலான எம்.என்.எஃப் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தென் மாநிலமான தெலுங்கானாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அங்கு சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுடன் அந்த அரசுகளின் பதவி காலமும் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. சில மாநிலங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பரப்புரைகளும் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி தேர்தல் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுதந்திரமான, நியாயமான முறையில் தூண்டுதலும் இல்லாத வகையில் தேர்தலில் சமமான களத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனஉத்தரவிட்டார்.
80 வயதுக்கு அதிகமான முதியவர்கள், பழங்குடியின மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதான வாக்குச் சாவடி அணுகுமுறை போன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வாக்காளர் பட்டியல் குறித்தும் இதில் விளக்கம் தரப்பட்டது. இந்த நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சற்றுமுன் வெளியிட்டார்.
அதன்படி மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ம் தேதியும் தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும். அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications