பாஜகவில் ஐக்கியமாகும் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்.. டெல்லியில் ட்விஸ்ட்!
டெல்லி: அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருந்து வந்தாலும் கூட, கடந்த சில காலமாகவே இரு தரப்பிற்கும் இடையே வார்த்தை மோதல் அதிகரித்தே வந்தது. பாஜகவில் இருந்து பலரும் விலகி அதிமுகவில் ஐக்கியமாகி வந்தனர்.
இதனால் கூட்டணியில் சிக்கல் எழுந்தது. இரு கட்சிகளிலும் இருக்கும் தலைவர்களும் மாறி மாறி விமர்சித்தும் வந்தனர். தற்போது தான் அந்த நிலைமை சற்று அமைதியாகி இருக்கிறது.

இந்தச் சூழலில் அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தன்னை பாஜகவில் அடிப்படை உறுப்பினராகவே இணைத்துக் கொள்கிறார். கட்சியில் சேர்ந்த உடன் அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாது என்றே தெரிகிறது.
பாஜகவில் இணைந்த பிறகு அவர் பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் தமிழக பாஜக தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. மைத்ரேயன் கடந்த அக். 9ஆம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைத்ரேயன் அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வானவர் என்ற போதிலும், அவர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியது என்னவோ பாஜகவில் இருந்து தான். முதலில் பாஜகவில் இருந்த அவர் அங்கே மாநில தலைவராகவும் இருந்தவர்.
2000ஆம் ஆண்டு அவர் பாஜகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக இருந்த போது, ஓபிஎஸ் அணிக்கு முதலில் சென்றவர், அதன் பிறகு எடப்பாடி அணிக்கு மீண்டும் திரும்பினார்,
கடைசியாக மீண்டும் எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு ஐக்கியமானவர். அதைத் தொடர்ந்து அவரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக எடப்பாடி கடந்தாண்டு அக். மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications