"ஆளுநர்கள் ஒன்றும் போஸ்ட் மேன் இல்லை.." உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வைத்த முக்கிய வாதம்
டெல்லி: மசோதாக்கள் மீது முடிவெடுக்கக் காலக்கெடு நிர்ணயம் செய்வது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று 2வது நாளாக தொடர்ந்தது. இதில் மத்திய அரசு பல முக்கிய வாதத்தை முன்வைத்தது. ஒரு மசோதா எவ்வளவு முறை சட்டசபையில் நிறைவேற்றப்பட்டாலும் அதை ஆளுநரால் திருப்பி அனுப்ப முடியும் என்றும் ஆளுநர் பதவி ஒன்றும் போஸ்ட்மேன் இல்லை என்றும் மத்திய அரசு வாதத்தை முன்வைத்தது.
ஆளுநருக்கு மசோதாக்கள் மீது முடிவெடுக்கக் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்ட விவகாரத்தில் குடியரசு தலைவர் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று இரண்டாவது நாளாக நடந்த விசாரணையில் மத்திய அரசு சார்பில் பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

4 ஆப்ஷன்கள்
சட்டசபை ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பும்போது ஆளுநருக்கு நான்கு ஆப்ஷன்கள் இருப்பதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறினார். அவர் மேலும் விளக்கிப் பேசுகையில், "சட்டசபை ஒரு மசோதாவை அனுப்பினால் ஆளுநருக்கு 4 ஆப்ஷன்கள் உள்ளன.. மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கலாம், நிறுத்தி வைக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம். அப்படி இல்லை என்றால் குடியரசுத் தலைவரின் ஆலோசனைக்காக அனுப்பலாம். இது ஆளுநரின் விருப்பத்திற்குட்பட்டவை" என்ற வாதத்தை முன்வைத்தார்.
உச்ச நீதிமன்றம் கருத்து
இதில் ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைக்க இருக்கும் அதிகாரம் குறித்து தொடர்ச்சியாக விவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் நீதிபதிகள், "ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்கும்போது, சட்டசபை மீண்டும் அந்த மசோதவை தாக்கல் செய்ய முடியாதா? மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் அது செயலிழந்துவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளை ஆளுநர்கள் ரத்து செய்யும் அதிகாரம் ஆளுநர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இயங்கும் சூழல் உருவாகும்" என்றார்.
சட்டம் 200-இன் உட்பிரிவில் (proviso) குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு இல்லை என்று என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார். அதாவது மசோதா மீது குறிப்பிட்ட காலம் வரை முடிவெடுக்கவில்லை என்றால் அதைச் சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனை ஆளுநருக்குப் பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு மசோதாவை இப்படி நிறுத்தி வைப்பதன் மூலம், முன்மொழியப்பட்ட அந்தச் சட்டம் செல்லாததாகிவிடும்.
அரிதிலும் அரிது
இருப்பினும், இதுபோல மசோதாவை நிறுத்தி வைப்பது அரிதிலும் அரிதான முடிவு என மேத்தா குறிப்பிட்டார். மேலும், எந்தெந்த சூழ்நிலைகளில் ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைப்பார் என்பதையும் அவர் விளக்கினார். ஒரு சட்டம் அடிப்படை உரிமைகளை மீறினாலோ அல்லது மத்திய சட்டங்களுக்கு முரணாக இருந்தாலோ அதை அரிதிலும் அரிதாக கருதி ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைப்பார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி நரசிம்மா, "ஒரு முறை ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை சட்டசபை மீண்டும் நிறைவேற்றினால், ஆளுநர் அதை நிராகரிக்க முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார். பொதுவாகவே சட்ட வல்லுநர்கள் இந்தக் கருத்தைச் சொல்வார்கள். அதாவது ஆளுநர் ஒரு மசோதாவை ஆறு மாதங்களில் முடிவெடுக்காமல் திருப்பி அனுப்பினால்.. அதே மசோதாவை மீண்டும் அரசு நிறைவேற்றி அனுப்பலாம் என்றும் அப்போது அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என்று சொல்வார்கள். அதைக் கேள்வியைத் தான் நீதிபதியும் எழுப்பியிருந்தார்.
போஸ்ட்மேன் இல்லை
இருப்பினும், எந்தவொரு சூழ்நிலைகளிலும் ஆளுநர் தனது அதிகாரத்தை இழக்க மாட்டார் என்று சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார். சட்டமன்றம் ஒரு மசோதாவை மீண்டும் மீண்டும் எத்தனை முறை நிறைவேற்றினாலும், ஆளுநரால் அதை மீண்டும் மீண்டும் நிறுத்தி வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும், "ஒரு மசோதா இதுபோல திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில், தன்னுடைய அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அவர் வேறு என்ன செய்ய வேண்டும்? அவர் ஒன்னும் போஸ்ட்மேன் இல்லை. அரசியலமைப்பு ரீதியாக ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர், நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை விடக் குறைவானவர் அல்ல" என்றார்.












Click it and Unblock the Notifications