அனைத்து வகையான பால் கேன்களுக்கும் 12% ஜிஎஸ்டி - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
டெல்லி: அனைத்து வகை பால் கேன்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 53வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்மலா சீதாராமன், அனைத்து வகையான பால் கேன்களுக்கும் ஒரே சீரான 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும். எஃகு, அலுமினியம், இரும்பு, உள்ளிட்ட அனைத்து வகையான பால் கேன்களுக்கு ஒரே ஜிஎஸ்டி விதிக்க கவுன்சில் பரிந்துரைத்துள்ளது, இது தொடர்பாக ஆலோசித்து தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், கல்வி நிறுவனங்களுக்கு வெளியே மாணவர்கள் தங்கும் விடுதிகளின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும். ஜிஎஸ்டி விதி விலக்கு பெற மாணவர்கள் அந்த விடுதிகள் 90 நாட்கள் தங்க வேண்டும், மாத வாடகை ரூ.20 ஆயிரத்திற்கு மேல் இருக்க கூடாது என அறிவித்துள்ளார்.
மேலும், அட்டை பெட்டிகளுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும். சோலார் குக்கர்கள், நீர் தெளிக்கும் ஸ்ப்ரிங்கிளர் இயந்திரங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை உள்ளிட்ட சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும். பொருட்களை வைக்கும் அறை, பயணிகள் பயன்படுத்தும் மின்சார வாகன சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும். நடைமேடை பயணச்சீட்டு உள்ளிட்டவற்றிற்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு, குறு வரி செலுத்துவோர் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டி ஆர் 4 படிவத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்க கவுன்சில் பரிந்துரைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications