ஹரியானா அதகளம்.. காங்கிரஸில் அதிகாரப்பூர்வமாக இணைந்த மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா
டெல்லி: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக உக்கிரமான போராட்டங்களை நடத்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் இன்று அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைகின்றனர். காங்கிரஸில் இணையும் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவருமே ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஹரியானா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜகவுக்கு சொற்பமான இடங்கள்தான் கிடைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள்.
காங்கிரஸ் கட்சியோ பாஜகவுக்கு அந்த சொற்ப இடங்கள் கூட கிடைத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது. இதனால் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, ஜேஜேபி கட்சி ஆகியவற்றுடன் தீவிரமான கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்துகிறது காங்கிரஸ். அதாவது ஹரியானாவில் இருக்கிற அத்தனை எதிர்க்கட்சிகளையும் ஒன்று சேர்த்து களமாடுவது என்கிற முனைப்பில் உள்ளது காங்கிரஸ்.
இதன் தொடர்ச்சியாக பாஜகவுக்கு எதிராக டெல்லி வீதிகளில் உக்கிரமாகப் போராடிய மல்யுத்த வீரர்களையும் ஹரியானா தேர்தல் களத்தில் காங்கிரஸ் களமிறக்குகிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க வாய்ப்பை திட்டமிட்ட சதியால் பறிகொடுத்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸில் இணைந்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இது தொடர்பாக ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கேவால் திங்ரா கூறுகையில், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் இன்று காங்கிரஸில் இணைகின்றனர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன வீட்டில் முறைப்படி இருவரும் காங்கிரஸில் இணைகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு ஆதரவாக மத்திய அரசு நிற்கிறது. நாங்கள் போராடிய, பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்கள் பக்கம் நிற்கிறோம். இருவரும் தேர்தலில் போட்டியிடுவார்களா? இல்லையா? கட்சி மேலிடமே முடிவு செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications