லிப்ட் கேட்டு சென்றனர்.. உ.பி விபத்தில் 24 வெளிமாநில தொழிலாளர்கள் பலியானது எப்படி? பகீர் பின்னணி!
உத்தர பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 24 வெளி மாநில தொழிலாளர்கள் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி: உத்தர பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 24 வெளிமாநில தொழிலாளர்கள் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று முழு விவரம் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் சமீப நாட்களாக வெளிமாநில தொழிலாளர்கள் சாலை விபத்தில் பலியாவது அதிகரித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் இவர்கள் வழியில் சாலை விபத்தில் சிக்கி பலியாகிறார்கள்.
இதுவரை 100 க்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் பல்வேறு விபத்துகளில் நாடு முழுக்க பலியாகி இருக்கிறார்கள். கடந்த வாரம் மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்தில் இதேபோல் 16 வெளிமாநில தொழிலாளர்கள் ரயில் ஏறி பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Migrant Workers: உ.பி.யில் இரு லாரிகள் மோதல்.. புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி.. தொடரும் துயரம்
இன்று நடந்த சம்பவம்
இந்த நிலையில் இன்று உத்தர பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 24 வெளி மாநில தொழிலாளர்கள் பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று முழு விவரம் வெளியாகி உள்ளது. அதிகாலை 3 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியுள்ளது. ஒரே ஒரு லாரியில் மட்டும்தான் வெளிமாநில தொழிலாளர்கள் இருந்துள்ளனர். எல்லோரும் உத்தர பிரதேச எல்லைக்கு செல்ல வேண்டும் என்பதால் லக்னோ நோக்கி சென்றுள்ளனர்.
லிப்ட் கேட்டு சென்றார்
இவர்கள் எல்லோரும் உத்தர பிரதேசத்தில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள். பலர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். சிலர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். இன்னும் பலர் ஹரியானா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் உத்தர பிரதேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து நடந்து சென்று லக்னோ வரை சென்று, பின் அங்கு ரயில் பிடிக்கலாம் என்று நினைத்து இருக்கிறார்கள். இதற்காக 100 கிமீக்கும் அதிகமாக நடந்துள்ளனர்.
ஆனால் என்ன ?
இந்த நிலையில் இவர்கள் நடந்தே லக்னோவில் இருந்து 200 கிமீ தூரம் இருக்கும் அவுரியாவை அடைந்துள்ளனர். அங்கு இரவு நேரத்தில் அவர்களுக்கு கால் வலிக்கவே, அதே வழியில் சென்ற லாரியில் லிப்ட் கேட்டுள்ளனர். அந்த லாரி கோதுமை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஆகும். இதில் ஏறி அதிகாலை 2.30 மணிக்கு அவர்கள் லக்னோ நோக்கி சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் லாரியில் ஏறிய அடுத்த அரை மணி நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.
3 மணிக்கு விபத்து ஏற்பட்டது
சரியாக 3 மணிக்கு அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்துள்ளது. எதிரே வந்த லாரி மிக வேகமாக வந்துள்ளது. அந்த லாரியில் மோதுவதை தவிர்க்க, இந்த லாரி ஓட்டுநர் எவ்வளவோ முயன்று இருக்கிறார். ஆனால் எதிரே வந்த லாரி மிக வேகமாக வந்து இந்த லாரி மீது மோதியள்ளது. எதிரே வந்த லாரியில்தான் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
யாருக்கும் உதவி செய்ய ஆள் இல்லை
இதில் சோகம் என்னவென்றால் இந்த விபத்து நடந்த போது , அங்கு தொழிலாளர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. கிட்டத்தட்ட நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. ஊரடங்கு காரணமாக அதிகாலையில் வாகனங்கள் எதுவும் செல்லவில்லை. இதனால் போலீஸ் வரும் வரை அவர்களில் பலர் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டது. இதுதான் பலர் சம்பவ இடத்திலேயே பலியாக காரணம் என்கிறார்கள்.
அதே இடத்தில்
இந்த விபத்தில் 24 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இன்னும் 20 பேர் அங்கு உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். 24 பேரும் பலியான பின்தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மிகவும் தாமதமாக நடந்த மீட்பு பணி இதற்கு காரணம் என்கிறார்கள். இரண்டு லாரி ஓட்டுனர்களில் யாராவது ஒருவர் தூங்கி இருக்கலாம், இதுதான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.