கவலையா இருக்கு! திடீரென ரஷ்யாவை கண்டித்த இந்தியா! பின்னணியில் அந்த போன் கால்? களத்தில் பிளிங்கன்!
டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று ரஷ்யாவை திடீரென இந்தியா கண்டித்ததற்கு பின் முக்கியமான போன் கால் ஒன்று காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யா போரில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. மேற்கு உலக நாடுகள் பல ரஷ்யாவை கண்டித்து இருந்தாலும் இந்தியா மட்டும் ரஷ்யாவை கண்டிக்கவே இல்லை.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட பல்வேறு வாக்கெடுப்புகளில் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க இத்தனை நாட்களாக இந்தியா மறுத்துவிட்டது. ஆனால் முதல்முறையாக நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவை இந்தியா கண்டித்தது.

என்ன சொன்னது
உக்ரைனின் கீவ் நகரில் இருந்து 23 கிமீ தொலைவில் உள்ள புச்சா நகரத்தில் ரஷ்யா கொடூரமான கொலைகளை செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 360க்கும் அதிகமான உடல்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. இங்கு உக்ரைன் மக்களை ரஷ்ய படைகள் கொடுமைப்படுத்தி கொன்றதாகவும், கைகளை கட்டி, மோசமாக தாக்கி கொலை செய்ததாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது. ஐநாவில் நேற்று இந்த புச்சா கொலைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

விவாதம்
இதில் பேசிய இந்தியாவின் நிரந்தர தூதர் டி எஸ் திருமூர்த்தி, உக்ரைனில் புச்சா நகரத்தில் நடைபெற்ற கொலைகளை இந்தியா கண்டிக்கிறது. இதற்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்டு இருக்கும் விசாரணை முன்னெடுப்பிற்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. இந்த கொலைகள் இந்தியாவிற்கு கவலை அளிக்கின்றன. புச்சா கொலைகள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தும் முடிவை இந்தியா ஆதரிக்கிறது, என்றார்.

ஐநா
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்றில் ரஷ்யாவை இந்தியா விமர்சனம் செய்வது இதுவே முதல்முறையாகும். இந்தியாவின் இந்த திடீர் நிலைப்பாடு மேற்கு உலக நாடுகள் பலவற்றை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்தியா இப்படி ஒரு நிலைப்பட்டை எடுக்கும் என்று பல்வேறு நாடுகள் எதிர்பார்க்கவில்லை. ரஷ்யாவிற்கும் இந்தியாவின் இந்த நிலைப்பாடு அதிர்ச்சியை கொடுத்திருக்கலாம். இந்த நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று ரஷ்யாவை திடீரென இந்தியா கண்டித்ததற்கு பின் முக்கியமான போன் கால் ஒன்று காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

என்ன நடந்தது?
நேற்று இரவு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு போன் செய்து பேசினார். இந்த போன் காலுக்கு பின் சில மணி நேரங்களில்தான் டி எஸ் திருமூர்த்தி ரஷ்யாவிற்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசினார். இந்த நிலையில் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக முதல்முறை குரல் கொடுத்துள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரிடம் பேசிய பிளிங்கன், இரண்டு நாட்டு உறவு நிலைத்து இருக்க வேண்டும் என்று கூறியதாகவும், இரண்டு நாட்டு போர் பற்றி பேசியதாகவும், கச்சா எண்ணெய் விற்பனை பற்றி பேசியதாகவும், ஐநா பாதுகாப்பு கவும்சில் வாக்கெடுப்பு பற்றி பேசியதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதில் ரஷ்யாவிற்கு எதிராக இந்தியாவிடம் அமெரிக்கா பேசி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பின்பாகவே இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்து உள்ளது.

என்ன சொன்னார்?
முன்னதாக இந்தியா வந்த அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் , அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கம் காட்ட வேண்டும். நம்மிடையே இருப்பது பாரம்பரிய உறவு. ரஷ்யாவை இந்தியா சார்ந்து இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்ட கூடாது. ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மட்டுப்படுத்தும் வகையில் செயல்படும் நாடுகள் பின்விளைவுகளை சந்திக்கும் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் ரஷ்யாவை முதல்முறை இந்தியா எதிர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications