காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம்: ப.சிதம்பரம்
டெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் கூட ரத்து செய்யாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடுகள் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
அதேநேரம் ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படைக்கு அத்தியாவசியத் தேவை என்று பாஜக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ரபேல் ஒப்பந்தம் தொடரும்
இந்த நிலையில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு சிதம்பரம் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ரபேல் போர் விமானங்கள் கண்டிப்பாக வாங்கப்படும். இந்த ஒப்பந்தம் சில மாறுதல்களுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும். கூடுதல் விலை கொடுத்து குறைந்த அளவுக்கு விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பது தான் இப்போதைய பிரச்சனை. அதை சரி செய்து குறைந்த விலையில் ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆப்செட் உரிமை விஷயமும் கவனிக்கப்படும்.
தேவையான விமானம்
ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் முடிவை, முதலில் எடுத்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு தான். எனவே ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. ரபேல் ஒரு நல்ல விமானம். இந்தியாவுக்கு அது தேவை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 126 ரபேல் போர் விமானங்களை குறைந்த விலைக்கும், வாங்குவதோடு மிக விரைவாக அவற்றை டெலிவரி செய்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடாளுமன்ற குழுவிற்கே அதிகாரம்
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவது நல்ல முடிவாக இருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு நீதிமன்றம் சரியான இடம் கிடையாது. நாடாளுமன்ற குழு இந்த விஷயத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியும். நாடாளுமன்ற குழு அளிக்கக்கூடிய அறிக்கை அடிப்படையில் பிற விசாரணை அமைப்புகள் இதை விசாரிக்க முடியும். உலகமெங்கும் இதுதான் நடைமுறை.
அமெரிக்கா, பிரிட்டன்
ஒருவேளை அமெரிக்காவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்று இருக்குமானால், அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகியவை உடனடியாக விசாரணையை ஆரம்பிக்கும். பிரிட்டனில் நாடாளுமன்ற கமிட்டி இதற்கான விசாரணையை ஆரம்பிக்கும். துரதிஷ்டவசமாக நமது நாடாளுமன்ற கமிட்டியோ அல்லது நாடாளுமன்றமோ தானாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கவில்லை. எனவேதான் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க முடியவில்லை. நாடாளுமன்ற கமிட்டியின் விசாரணைக்கு மத்திய அரசின் பரிந்துரை அவசியப்படுகிறது.
கேள்விக்கு விடையில்லை
விமானப்படைக்கு 126 விமானங்கள் தேவைப்படும் நிலையில் நீங்கள் எதற்காக அதை 36 என்ற அளவில் குறைதீர்கள்?. குறைந்த விலைக்கு விமானங்கள் கிடைக்குமானால் கூடுதலாகத்தான் விமானங்களை வாங்கி இருக்க வேண்டுமே? என்று கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் வருவதில்லை. இவ்வாறு ப.சிதம்பரம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.