சூரியன் மீது சேற்றை வாரி இறைத்தால் அப்புறம் என்ன ஆகும் தெரியுமா? அமித்ஷா ஆவேசம்
Recommended Video
டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த சில நிமிடங்களிலேயே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, பாஜக தலைவர் அமித்ஷா கடுமையாக விமர்சனம் செய்து பேட்டியளித்துள்ளார்.
அமித்ஷா தனது பேட்டியில் கூறியது: ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலமாக, ராகுல் காந்தி தனது அரசியல் ஆதாயத்திற்காக பொய் பிரச்சாரம் செய்துள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது.
ரபேல் கொள்முதலில், எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. யாருக்கும் ஆதரவாக மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை என்றும் உறுதியாகிவிட்டது.
உண்மை எப்போதுமே வெல்லும். காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. அந்த கட்சி ஊழல் வரலாற்றை தனது தலையில் சுமந்துகொண்டு உள்ளது.
நீங்கள் சூரியனின் மீது சேற்றை வாரி இறைக்க முற்பட்டால் சேறு சூரியன் மீது படாது. உங்கள் மீதுதான் வந்து விழும். பொய்யை வைத்து அரசியல் செய்தவர்கள் முகத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஓங்கி அறைந்துள்ளது.
அரசின் மீதும், பிரதமர் மீதும் சிறுபிள்ளைத்தனமான புகார்களைக் கூறியது காங்கிரஸ். காங்கிரஸ் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.