30 வினாடிகளாவது செல்போன் ரிங் ஆகனும்.. டிராய் அதிரடி.. பின்னணியில் நடந்த வணிக யுத்தம் தெரியுமா?
டெல்லி: மொபைல் போன் குறைந்தபட்சம் 30 விநாடிகள் ரிங் ஆகும் வகையில்தான், இருக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) செல்போன் நிறுவனங்களுக்கு, உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்து இருக்க முடியும். நமக்கு வரக்கூடிய மொபைல் போன் அழைப்பு ரிங்குகள் சில விநாடிகளிலேயே சிணுங்கலை நிறுத்தி விடுவது வழக்கம்.
முன்பெல்லாம் 45 விநாடிகள் வரை தொடர்ச்சியாக மொபைல்போன்கள் ரிங் ஆகும். ஆனால் சமீபமாக இது 20 முதல் 25 விநாடிகள் ஆக குறைந்து போனது. செல்போனை எடுக்கும் முன்பாகவே மறுமுனையில் இருந்து வரும் அழைப்பு துண்டிக்கப்பட்டது அதிகரித்துவிட்டது.
இதன் பின்னணியில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நாட்டின் இரு பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடும் தொழில் போட்டி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
ஜியோ, ஏர்டெல்
ஜியோ அதிக அளவுக்கு இலவச அழைப்புகளை வழங்குவதன் காரணமாக, ஜியோ வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அவுட்கோயிங் கால்கள் செய்கிறார்கள். அதேநேரம் எதிர் முனையில் உள்ள வாடிக்கையாளர்கள், ஜியோ நம்பர் வைத்திருக்கும் வாடிக்கையாளருக்கு மிஸ்டுகால் கொடுப்பது அதிகரித்துள்ளது.
இவ்வாறு ஜியோ நம்பருக்கு மிஸ்டு கால்கள் அதிகம் வந்தாலும், அந்த அழைப்புக்கும் ஜியோ எதிர்முனையிலிருந்து வரும் தொலைபேசி நெட்வொர்க்கிற்கு பணம் செலுத்த வேண்டிய தேவை எழுகிறது.
மிஸ்டு கால்கள்
உதாரணத்திற்கு, ஏர்டெல் நம்பரிலிருந்து, ஜியோ நம்பருக்கு, மிஸ்டு கால் வந்தால் கூட, ஜியோ, அதற்கான தொகையை ஏர்டெல்லுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் போனை எடுத்து பேசினால்தான், வாடிக்கையாளரிடமிருந்து பணம் வசூலிக்க செல்போன் சேவை நிறுவனங்களால் முடியும்.
பணம்
எனவே உள் வரக்கூடிய அழைப்புக்கான ரிங் காலக்கெடுவை குறைத்துவிட்டால், தொலைபேசியை, எடுப்பதற்கு முன்பே கட்டாகிவிடும். உதாரணத்திற்கு ஜியோவிலிருந்து ஏர்டெல் நம்பருக்கு ஒருவர் கால் செய்து போனை எடுக்கும் முன்பு சீக்கிரமே ரிங் கட் ஆகிவிட்டால், ஏர்டெல் நம்பர்க்காரர் மறுபடியும் ஜியோவுக்கு போன் செய்வார். இதனால் ஜியோவுக்கு வருவாய் கிடைக்கும். எனவேதான், ரிங்கிங் சீக்கிரம் கட் செய்யப்பட்டது.
டிராய் அதிரடி
இந்த பஞ்சாயத்து ட்ராய் அமைப்பிடம் சென்றது. அப்போது 45 விநாடிகளாவது ரிங் செல்லும் வகையில், நெட்வொர்க் செட் செய்து, இருக்க வேண்டும் என்று பாரதி ஏர்டெல் தரப்பில் வாதிடப்பட்டது. ஜியோ நிறுவனம், 20 முதல் 25 விநாடிகள் மட்டும் போதும் என்று வாதிட்டது. வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் 30 விநாடிகள் வரை ரிங் செல்லலாம் என்று வாதிட்டன. இந்த நிலையில்தான், டிராய், இன்று பிறப்பித்த உத்தரவில், 30 வினாடிகளாவது செல்போன் சிணுங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.