இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுத கொள்கைகள் என்ன தெரியுமா? யார் முதலில் தாக்குவார்கள்! தெரிஞ்சுக்கோங்க
டெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. இரு நாடுகளும் NPT எனப்படும் உலகளாவிய அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அப்படியெனில் இரு நாடுகளின் அணு ஆயுத கொள்கைகள் என்ன? யார் முதலில் தாக்குவார்கள் என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.
கடந்த 2024ம் ஆண்டு ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கம் இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகளின் அணு ஆயுதங்கள் பற்றி தகவல்களை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்களும் பாகிஸ்தானிடம் 170-200 வரை ஆயுதங்களும் இருப்பதாக சொல்லப்பட்டது.

இரு நாடுகளும் மேலே சொன்னதை போல அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும், கடந்த 1988ம் ஆண்டு வேறு ஒரு அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இதன்படி, ஒருவரையொருவர் குறி வைத்துக்கொள்வது தவிர்க்கப்படும். இதில் இந்தியாவை பொறுத்தவரை 'No First Use' எனும் கொள்கை பின்பற்றப்படுகிறது. அதாவது நாம் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம். மாறாக, வேறு யாராவது நம்மை தாக்கினால் பயன்படுத்துவோம்.
பாகிஸ்தான் கொள்கையில் தெளிவு இல்லை. தேவைப்படும்போது எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்துவோம் என்று அந்நாடு கூறி வருகிறது. அப்படியெனில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் இப்போது இருப்பதை விட தீவிரமடைந்தால், முதலில் பாகிஸ்தான்தான் அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் ஆசிய கண்டத்தில் பேரழிவு ஏற்படும்.
இன்றைய தேதியில் உலகம் முழுவதும் சுமார் 12,331 அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கையில் 88% அமெரிக்கா, ரஷ்யாவிடம் மட்டும் இருக்கிறது. வெறும் 9 நாடுகளிடம்தான் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த லிஸ்ட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் இருக்கிறது.
உலகம் ஏற்கெனவே இரண்டு அணு ஆயுத அழிவை கண்டிருக்கிறது. கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு வீசப்பட்டது. இந்த குண்டு வெடித்த போது அதிலிருந்து வந்த வெப்பத்தின் அளவு 4000 டிகிரி செல்சியல். சென்னை, வேலூரில் 41 டிகிரி வெயில் அடித்தாலே நம்மால் தாங்க முடிவதில்லை. அப்படியெனில் 4000 டிகிரி எனில் எந்த அளவுக்கு வெப்பமாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இரும்பு கூட இந்த வெப்பத்தில் உருகி விடும். மனித உடல்கள் அப்படியே ஆவியாகின.
இந்த தாக்குதல் நடந்த 3வது நாளில் அதாவது ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி நாகசாகியில் இரண்டாவது அணு குண்டை அமெரிக்கா வீசியது. இரண்டு தாக்குதலிலும் உடனடியாக இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சம். அதன் பின்னர் பல லட்சம் பேர் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளால் உயிரிழந்தனர்.
இனி இப்படியொரு பாதிப்பை பார்க்க கூடாது என்று உலகம் விரும்புகிறது. எனவே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதல் போக்கை விட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications