இந்தியாவில் 1,96,427 பேருக்கு கொரோனா உறுதி...3,26,850 மீண்டனர் - 3511 பேர் மரணம்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2லட்சத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,26,850 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு ஒரே நாளில் 3511 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் 1,96,427 பேர் புதிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தெரிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 3,26,850 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கொரோனா இரண்டவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சம் பேருக்கு மேல் அதிகரிக்கவே கொரோனா அதிகம் பரவிய மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் லாக்டவுன் அமலில் உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,96,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,69,48,874ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 3,07,231 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,40,54,861 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 3,511 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,07,231 ஆக உயர்ந்துள்ளது. குணமடையும் விகிதம் 88.69 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 25,86,782 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 19,85,38,999 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது நாடாக இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சுமார் 450 நாட்களாகியுள்ள நிலையில், கடந்த 27 நாட்களில் மட்டும் 1 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் முதல் 206 நாட்களில் 1 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்து 1 லட்சம் பேர் உயிரிழப்பை எட்ட சரியாக 208 நாட்கள் எடுத்தது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியன்று 2 லட்சத்தை தொட்ட உயிரிழப்பு, தற்போது வெறும் 27 நாட்களில் 3 லட்சத்தை கடந்துள்ளது.
மே மாதத்தின் முதல் 23 நாட்களில் மட்டும் 87 ஆயிரத்து 413 பேர் உயிரிழந்துவிட்டனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 36 ஆயிரத்து 339 பேர் கொரோனாவின் கோரத்திற்கு உயிரிழந்திருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 45 சதவிகித மரணங்கள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications