இந்தியாவை அவமானப்படுத்தும் டிரம்ப்.. நாமும் பதிலடியாக வரிகளை விதிக்கணும்! ஜிடிஆர்ஐ திட்டவட்டம்
டெல்லி: டிரம்பின் வரி அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. இதற்கிடையே இந்தியாவைத் தொடர்ந்து அவமானப்படுத்தும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ள ஜிடிஆர்ஐ அமைப்பின் தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா, பதிலடி கொடுக்கும் வகையில் நாமும் வரிகளை அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரெசிப்ரோகல் வரியை விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது ஒரு நாடு எவ்வளவு வரி விதிக்கிறதோ.. அதே அளவுக்கு அமெரிக்காவும் பதிலுக்கு வரி விதிக்கும் என்பதே இதன் அடிப்படையாகும். டிரம்பின் இந்த அறிவிப்புக்கு உலக நாடுகள் இரண்டு வகையில் எதிர்கொண்டுள்ளன.

சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு
சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் பதிலடி தரும் வகையில் வரிகளை அறிவித்துள்ளன. அதேநேரம் மெக்சிகோ பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை வரி தொடர்பாக ஒப்பந்தம் போடப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. இதற்கிடையே அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்த வேண்டும் என ஜிடிஆர்ஐ எனப்படும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவுடனான அனைத்து வகையான பேச்சுவார்த்தைகளையும் இந்தியா நிறுத்த வேண்டும் என்றும் சீனா, கனடா போன்ற நாடுகள் டிரம்பை எப்படி எதிர்கொள்கின்றனவோ அதே உத்தியை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று ஜிடிஆர்ஐ அமைப்பின் தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு தான் நன்மை
அமெரிக்க நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான வர்த்தக கோரிக்கைகளை இந்தியா ஏற்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவித்த அஜய் ஸ்ரீவஸ்தவா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது அதிகாரிகளும் இந்தியாவை விமர்சித்து வருவதாகவும் அதற்கும் கூட தவறான டேட்டாவையே அவர்கள் பயன்படுத்துவதாகவும் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "தவறான தரவுகளைப் பயன்படுத்தி டிரம்ப் இந்தியாவைப் பகிரங்கமாக அவமானப்படுத்துகிறார். இதுபோன்ற சூழ்நிலை இருந்தால் இரு தரப்பிற்கும் வெற்றியைத் தரும் டீலை போட முடியாது. இதனால் இந்தியா அனைத்து விதமான வர்த்தக பேச்சுவார்த்தையில் இருந்தும் விலக வேண்டும். மற்ற நாடுகளைப் போல அமெரிக்காவை எதிர்கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
சர்ச்சையை கிளப்பிய டிரம்ப்
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, இந்தியா நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றி வந்ததாகக் குறிப்பிட்ட டிரம்ப், அதைத் தான் அம்பலப்படுத்திவிட்டதாகவும் இதன் காரணமாகவே இப்போது அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாகக் கூறியிருந்தார். அது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்த நிலையில், ஜிடிஆர்ஐ அமைப்பின் தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா அதைக் குறிப்பிட்டே பேசியுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், "இது முற்றிலும் தவறானது.. இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவே அவர் இதுபோல பேசி வருகிறார். அதேநேரம் இந்த விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில் இந்தியா உண்மையான தரவுகளைக் கூற வேண்டும். டிரம்பும் அவரது அதிகாரிகளும் இந்தியாவை ஒவ்வொரு நாளும் சிறுமைப்படுத்துவதை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்றார்.
விவசாய பொருட்கள்
இந்தியாவில் விவசாய பொருட்களின் இறக்குமதிக்கு உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வரும் சூழலில், அதுபோல செய்தால் அது இந்தியாவுக்கு மிகப் பெரிய சிக்கலாக மாறும் அஜய் ஸ்ரீவஸ்தவா எச்சரித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "நமது நாட்டில் விவசாய துறையை நம்பி 70 கோடி பேர் உள்ளனர். ஆனால், அமெரிக்காவில் 70 லட்சம் பேர் மட்டுமே விவசாய துறையில் உள்ளனர்.
ஏற்கனவே வரி குறைவு தான்
ஒரு சில விவசாய பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தாலும் கூட அது ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதன் பிறகு அவர்கள் மேலும் மேலும் சலுகைகளைக் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். மேலும், பல அமெரிக்க விவசாய பொருட்களுக்கு ஏற்கனவே வரி குறைவாகவே உள்ளது. உதாரணத்திற்கு அமெரிக்க பாதாமிற்கு கிட்டதட்ட 5 சதவீதம் மட்டுமே வரி இருக்கிறது. பிஸ்தாவுக்கு 10 சதவீத வரி தான் இருக்கிறது.
மேலும், தற்போதைய சூழலில் நாம் விவசாய பொருட்களை அமெரிக்காவுக்குக் குறைவாகவே ஏற்றுமதி செய்கிறோம். எனவே, இப்போது அவர்கள் விவசாய பொருட்களுக்கு வரி விதித்தாலும் கூட அது நமது ஏற்றுமதியைப் பெரியளவில் பாதிக்காது" என்றார்.












Click it and Unblock the Notifications