வியூக சக்கரம்.. PoK-ல் சம்பவம் செய்த இந்தியா! பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் அழிப்பு
டெல்லி: இந்தியா மீது அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நம் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை பாகிஸ்தானுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாட்டு ராணுவத்தின் நிலையை நம் ராணுவம் அடித்து நொறுக்கி இருக்கிறது.
இன்று அதிகாலை சுமார் 5.44 மணியளவில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இது நடந்திருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதலை தொடங்கியிருக்கிறது. அறிவிக்கப்படாத போரை தொடங்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வேலையை இந்திய ராணுவம் மேற்கொண்டிருக்கிறது.
எல்லை பகுதியான ஜம்மு காஷ்மீரின் முக்கிய நிலைகள் மீது பாகிஸ்தான் வீசிய ஏவுகணைகளை, இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்கையில், மறுபுறம் ராஜஸ்தான், பஞ்சாப் மீதும் பாகிஸ்தான் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. தாக்குதல் காரணமாக மேற்குறிப்பிட்ட மூன்று மாநிலங்களிலும், கூடுதலாக குஜராத், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இலக்குகளை குழப்புவதற்காகவும், குடியிருப்பு பகுதிகள் மேல் குண்டு வீசப்படக்கூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நேற்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. இதனை ஓட்டி வந்த விமானியை உயிருடன் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டது. பயணிகள் இரண்டு முறை பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பாக பணிகள் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. ரயில்/பேருந்து முனையங்களிலும் முக்கிய நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் நகரங்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் சாமர்த்தியமான தடுப்பு நடவடிக்கையால் பாகிஸ்தான் கடுப்பாகியிருக்கிறது. எனவே அடுத்த தாக்குதலை மிக தீவிரமாக திட்டமிடும் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் எல்லா தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியா முழு தயாரிப்புடன் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications