இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது! நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை
டெல்லி: உலக நாடுகள் இந்தியாவை பார்த்த விதம் மாறி உள்ளது. நம் நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க உலக நாடுகளை நாம் நம்பி இருக்கும் நிலை சென்றுவிட்டது. இந்தியா யாரையும் நம்பி இல்லை, என்று குடியரசுத் தலைவர் தனது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
2023ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கிறது.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் அவை நடவடிக்கைகள் முடிவடையும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். இன்று மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இறுதியில் அந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடைபெறும். அந்த வகையில் இன்று இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது.

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் தனது உரையில், 2047க்குள் நமது நாட்டை புதிய உயரத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். கடந்த காலத்தின் பெருமையை மறக்காமல் நவீனத்துவமும் சேர்ந்த ஒரு நாட்டை உருவாக்க வேண்டும். பொன்னான வரலாற்றை கொண்ட ஒரு தேசத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். தற்சார்பு கொண்ட 'ஆத்மநிர்பர்' திறன் உள்ள ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும். மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றும் திறன் கொண்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் சுயமரியாதை
ஜம்மு காஷ்மீரின் 370வது சட்ட பிரிவை நீக்கியது முக்கியமான நடவடிக்கை. முத்தலாக் தடை இந்த அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று. இந்தியாவின் சுயமரியாதை தற்போது உச்சத்தில் இருக்கிறது. உலக நாடுகள் இந்தியாவை பார்த்த விதம் மாறி உள்ளது. நம் நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க உலக நாடுகளை நாம் நம்பி இருக்கும் நிலை சென்றுவிட்டது. இந்தியா யாரையும் நம்பி இல்லை. உலக பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வளித்து வருகிறது.

தீர்க்கமான இந்தியா
இந்தியாவில் நிலையான, அச்சமற்ற மற்றும் தீர்க்கமான அரசாங்கம் உள்ளது.இந்திய அரசு பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. வறுமையற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் வளர்ச்சி அடைய வேண்டும். இளைஞர்கள், பெண்கள் நாட்டை வழிநடத்தும் விதமாக வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இந்திய இளைஞர்கள் உலகிற்கே முன்னோடியாக இருக்க வேண்டும்.

குடிநீர்
இந்திய அரசு சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் எந்தவித பாகுபாடும் இன்றி உழைத்துள்ளது. பல அடிப்படை வசதிகள் 100% மக்கள்தொகையை எட்டியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளின் விளைவாக இந்த சாதனையை படைத்துள்ளோம்.ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் சுமார் 11 கோடி குடும்பங்கள் பலன் அடைந்துள்ளன. 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஏழைக் குடும்பங்கள் இதன் மூலம் அதிகபட்ச பலனைப் பெறுகின்றன என்று குடியரசுத் தலைவர் தனது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications