அமைச்சர் மகன் மீது பாலியல் பலாத்கார புகார்.. சாலையில் போன இளம்பெண்ணிடம் வேலையை காட்டிய மர்ம நபர்கள்!
டெல்லி : அமைச்சரின் மகன் மீது பாலியல் புகார் அளித்த பெண் மீது மர்ம நபர்கள் மை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநில அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோகித் ஜோஷி மீது, இளம்பெண் ஒருவர் டெல்லி போலீசில் பாலியல் புகார் அளித்திருந்தார். குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மீது மர்ம நபர்கள் மை வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம்
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் அமைச்சராக இருப்பவர் மகேஷ் ஜோஷி. இவரது மகன் ரோகித் ஜோஷி மீது, டெல்லியில் வசிக்கும் பெண் ஒருவர் டெல்லி போலீசில் பாலியல் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், "ரோகித் ஜோஷியுடன் ஃபேஸ்புக் மூலம் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலில் நேரில் சந்தித்தேன். அப்போது, அவர் குளிர்பானத்தில் எதையோ கலந்து கொடுத்ததால், அதை குடித்த நான் மயங்கினேன். அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

கர்ப்பத்தை கலைக்க
என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினார். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, கடந்த மாதம் வரை பல முறை என்னை கற்பழித்தார். இடையில் நான் கர்ப்பம் ஆனபோது, கருவை கலைக்குமாறு வற்புறுத்தினார்." எனத் தெரிவித்தார். இதையடுத்து ரோகித் ஜோஷி மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவு
அவரை கைது செய்ய டெல்லி போலீசார் ராஜஸ்தான் சென்றனர். ஆனால், ரோகித் ஜோஷி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், டெல்லி நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கியது. இதனையடுத்து நேற்று அவர் டெல்லி போலீசார் முன்பு விசாரணைக்காக ஆஜரானார்.

மை வீசி தாக்குதல்
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், டெல்லியில் கலிந்த் குஜ் சாலையில் தாயாருடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் இருவர் ஊதா இங்க் போன்ற திரவத்தை அவர் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வழக்குப்பதிவு
இளம்பெண் மீது மர்ம நபர்கள் மை வீசி தாக்குதல் நடத்தியது பற்றி டெல்லி மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பக எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி டெல்லி போலீசை வலியுறுத்திள்ளது. இது தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பிச் சென்ற குற்றவாளிகளை சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications