உள்ளே வரும் ஈரான்.. இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என அறிவிப்பு!
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என ஈரான் அமைச்சர் சையது அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரான் இவ்வாறு அறிவித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளான அடில் உசேன் தோக்கர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகிய இருவரின் வீடுகள் ஜம்மு காஷ்மீரில் நடந்த தனித்தனி குண்டுவெடிப்புகளில் அழிக்கப்பட்டன. எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் போக்கை தவிர்க்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கள் சகோதர நாடுகள். எங்கள் இடையே நூற்றாண்டு பழமையான கலாசாரம் மற்றும் நாகரிக உறவுகள் உள்ளன. மற்ற நட்பு நாடுகளைப் போல அவர்களுக்கும் நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான பதற்றத்தைத் தணிக்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் அரசு தயாராக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை ஈரான் வெளியுறவு அமைச்சகம் கண்டித்திருந்தது. "இது அனைத்து சர்வதேச சட்ட மற்றும் மனிதாபிமான விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறும் செயல்" என விமர்சித்தது.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், வன்முறையில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கும் பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications