ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுத்த நீதிபதிக்கு, பணமோசடி தீர்ப்பாய சேர்மன் பதவி!
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்று, தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, சுனில் கவுர், பண மோசடி தடுப்புச் சட்டத்திற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின், சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி மன்மோகன் சிங் பதவி வகித்து வருகிறார். அவர், ஓய்வு பெற்ற மறுநாள், வரும் செப்டம்பர் 23ம் தேதி, சுனில் கவுர், தீர்ப்பாயத்தின் புதிய சேர்மனாக பதவியேற்கிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி ப.சிதம்பரம் இடைக்கால ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீது கவுர் தீர்ப்பு வழங்கியிருந்தார். ஜாமீன் வழங்க முடியாது என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம். இதையடுத்து சிபிஐ ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளது. அவரிடம் தொடர்ந்து சிபிஐ தங்களது கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகிறது.
இதற்கு முன்பு, நேஷனல் ஹெரால்ட் வழக்கிலும், 2018ம் ஆண்டு, காங்கிரசின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதித்தவர், சுனில் கவுர் என்பது நினைவிருக்கலாம்.
சுனில் கவுர், டெல்லி ஹைகோர்ட் நீதிபதியாக 2008ல் நியமிக்கப்பட்டார். 2012ல் நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தனது 3 தசாப்த நீண்ட நெடிய, நீதிபதி பதவி வரலாற்றில், சுனில் கவுர் பல முக்கிய வழக்குகளை விசாரித்துள்ளார். சிபிஐக்குள் பெரும் பிளவு ஏற்பட காரணமாக இருந்த, சர்ச்சைக்குரிய, இறைச்சி வியாபாரி, மொயின் குரேஷி தொடர்பான வழக்கு இவரால் விசாரிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் மூத்த அதிகாரிகள் 3 பேருக்கு, எதிராக கிரிமினல் வழக்கு தொடரலாம் என விசாரணை நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்ததும், சுனில் கவுர்தான்.
ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு தீர்ப்பாயம் அல்லது கமிஷன்களுக்கு தலைவராக பதவி வழங்கும் நடைமுறையை மோடி அரசு பின்பற்றி வருகிறது. இது சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.