பிரதமருக்கு தமிழக வரலாறு தெரியுமா? கண்ணகியை தெரியுமா? போய் சிலப்பதிகாரம் படிங்க! கனிமொழி காட்டம்
டெல்லி: மகாபாரத திரெளபதியை போல மணிப்பூரிலும் பெண்கள் துகிலுரியப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டும் யாரும் உதவவில்லை என நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது திமுக எம்பி கனிமொழி ஆவேசமாக பேசினார்.
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தி வருகின்றன. மணிப்பூரில் பாரதமாதாவையே பாஜக அரசு படுகொலை செய்துவிட்டது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது திமுக எம்பி கனிமொழி பேசினார். அவர் மணிப்பூர் ":இந்தியா" எம்பிக்கள் குழுவில் இடம்பெற்று மணிப்பூர் சென்ற போது அந்த மாநில மக்கள் தெரிவித்த துயரங்களை லோக்சபாவில் விவரித்தார் கனிமொழி.
அவர் பேசுகையில் மணிப்பூரில் இரட்டை இன்ஜின் அரசு இரட்டை சீரழிவை பேரழிவை ஏற்படுத்தி மக்களை கொல்லும் அரசாக மாறிவிட்டது. மணிப்பூர் முதல்வர் வன்முறையை கட்டுப்படுத்தாமல் நடுநிலை வகிப்பதாக சொன்னார். அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை உட்பட ராணுவம் குவிக்கப்பட்டும் பயன் இல்லை.
மணிப்பூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு நிர்வாண ஊர்வலமாக நடத்தப்பட்டும் மத்திய அரசு மவுனம் காக்கிறது. அடைக்கலம் கோரிய பெண்களுக்கு மணிப்பூர் போலீஸ் பாதுகாப்பு தராமல் வன்முறை கும்பலிடம் விட்டுவிட்டு போனது. மணிப்பூர் விவகாரத்தில் பெண்கள் ஆணையங்கள் அனைத்தும் அமைதி காக்கின்றன.
மணிப்பூர் நிலவரம் குறித்து இன்னமும் மத்திய அரசு மவுனம் காக்கிறது. மகாபாரத திரெளபதியை போல மணிப்பூரிலும் பெண்கள் துகிலுரியப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டும் யாரும் உதவவில்லை. மணிப்பூர் மக்களை பிரதமர் சந்தித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். 3 மாதங்கள் கடந்த பிறகும் மணிப்பூரில் படுகொலைகளை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை.
மணிப்பூர் அகதி முகாம்கல் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மோசமாக உள்ளன. குக்கி,நாகா மக்கள் மீது மணிப்பூர் முதல்வர் குற்றம் சாட்டுகிறார்; முன்னாள் அதிகாரிகளோ மணிப்பூர் முதல்வர் மீது குற்றம்சாட்டுகின்றனர். உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மணிப்பூரில் மக்கள் தவித்தனர்.
தமிழகத்தின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியுமா? நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையில் இருந்து வந்ததாக சொன்னீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா. எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியங்கள். அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது.
ரயில்வே துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நாட்டில் ஏராளமானோர் வேலையில்லாமல் உள்ளநிலையில் மத்திய அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப முன் வரவில்லை. எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூடிவிட்டீர்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி உதவி ரூ300 என்பது ஒரு கிலோ தக்காளி விலைக்கு சமம். இவ்வாறு கனிமொழி அனல் தெறிக்கும் அளவுக்கு பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications