அக்டோபர் 15 ஆம் தேதி வரை.. 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கனும்.. கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
டெல்லி: தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், டெல்லியில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில், அக்டோபர் 15 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
5,000 கன அடி காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் சொல்லியும்கூட, கர்நாடகா இதனை ஏற்கவில்லை.. 18 நாட்களுக்கு காவிரியில் 3,000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என்பது காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவையும், கர்நாடகா ஏற்கவில்லை..

சிறிது நீர்: பெயரளவுக்கு சிறிது நீரை தந்துவிட்டு, காவிரி நீரை ஒரு சொட்டுகூட தமிழ்நாட்டுக்கு திறந்துவிட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறிவருகின்றன. கர்நாடகாவில் மழை இல்லை. அணைகளில் தண்ணீர் இல்லை என்று காரணங்களையும் சொல்லி வருவருடன், போராட்டங்களையும் நடத்தி, வருகிறார்கள்.
இதனிடையே, 2 நாளைக்கு முன்பு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை அடுத்த மாதம் 15ம் தேதி வரை கர்நாடகா திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.. இது கர்நாடகாவுக்கு மேலும் சிக்கலை தந்துள்ளது.. அதனால், இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்ய முடிவு செய்துள்ளது.
அவசர கூட்டம்: இத்தகைய சூழலில், இன்று (செப்டம்பர் 29ம் தேதி) டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழகம் கர்நாடக அதிகாரிகள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் காவிரி ஒழுங்காற்று அளித்த பரிந்துரையின் படி 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வரை 3 ஆயிரம் கன அடி நீரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு: இந்த கூட்டத்திற்கு இடையே, கர்நாடகாவில் பந்த் தொடர்ந்து நடந்து வருகிறது.. மண்டியா பந்த், பெங்களூர் பந்த் போராட்டங்கள் நடந்துமுடிந்த நிலையில், கன்னட சங்கங்களை ஒன்றாக இணைத்து, முழு அடைப்பு போராட்டத்தை இன்று நடத்தப்போவதாக, கன்னட சலுவளி கட்சியின் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார்.
இந்த பந்த் ரொம்ப சீரியஸாக இருக்கும்.. அரசு பஸ்கள், ஓட்டல், ரெஸ்டாரண்டுகள், திரையரங்குகள் இயங்காது. பெங்களூரில் விமான சேவைகளை முடக்குவோம்' என்று வாட்டாள் நாகராஜ் ஆவேசமாக கூறியிருந்தார். அதன்படியே, காலை முதல் பந்த் நடந்து வருகிறது.. பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எனினும், இரு மாநில எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்..












Click it and Unblock the Notifications