பரபரக்கும் தேர்தல் களம்..டென்ஷனில் வேட்பாளர்கள்! பாஜக ரொம்ப கூல்..காலையில என்ன செய்றாங்க பாருங்க.!
டெல்லி: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கைக்காக அரசியல் கட்சியினர் எண்ணிக்கை மையங்களில் தயாராக இருக்கும் நிலையில், பாஜகவோ கண்டிப்பாக வெற்றி என்ற நம்பிக்கையில் கட்சி அலுவலகத்தில் இனிப்புகளை தயார் செய்து வருகிறது.
நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த நாள் இன்று. சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக வீசி வந்த அரசியல் புயல் இன்று ஓய இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் தீயாய் வேலை செய்த அரசியல் கட்சியினர் இன்று அதற்கான முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அனைத்து தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கி இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இந்தியாவின் பிரதான கட்சிகள் பல இணைந்திருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கின
சில முக்கியமான கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் தனித்தே களம் கண்டிருக்கின்ற அல்லது தங்கள் தலைமையில் புதிய அணியை உருவாக்கி இருக்கின்றனர். சில மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருக்கும் அல்லது முக்கிய எதிர் கட்சிகள் தேசிய அளவிலான கூட்டணியில் இணையாமல் தனித்தோ அல்லது தாங்களே ஒரு கூட்டணியை உருவாக்கி களம் கண்டிருக்கின்றன. அந்த வகையில் அதிமுக, உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்கானாவில் பாரத ராஷ்டிய சமீதி உள்ளிட்ட கட்சிகள் தேசிய கூட்டணியில் இணையவில்லை.
இந்திய மக்கள் தொகையில் 96.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் சராசரியாக 60 சதவீத வாக்குகள் பதிவாகின. அதாவது 64 கோடி பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். ஏழு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் தற்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் தற்போது இருந்து வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கும் நிலையில் இந்தியாவை ஆளப்போகும் அடுத்த பிரதமர் யார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜகவே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து உற்சாகத்தில் இருக்கின்றனர் பாஜகவினர். தமிழகத்தில் பாஜக கால் பதிக்குமா? கேரளாவில் எம்பிக்கள் கிடைப்பார்களா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது நாங்கள் தான் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இதனிடையே டெல்லியில் வெற்றி கொண்டாட்டத்திற்கு தற்போது பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.
காலை 10 முதல் 11 மணிக்கு எல்லாம் முன்னணி நிலவரங்கள் தெரியவரும் நிலையில் ஆட்சி அமைக்க போவது யார் என்பதற்கான விடை கிடைத்துவிடும். ஆனால் வெற்றிக் கொண்ட்டாட்டத்திற்கு தற்போதே பாஜக தலைமையகம் தயாராகி வருகிறது. காலை முதலே அங்கு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் வெற்றி கொண்டாட்டத்திற்காக கேசரி, பூரி, லட்டு ஆகியவை தற்போதிலிருந்து அங்கு தயாராகி வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான லட்டுகள், பூரி, கேசரி மற்றும் காலை உணவு உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications