மதியம் 2 மணிக்கு மோடியை சந்தித்த அமித் ஷா.. முக்கிய ஆலோசனை.. பட்னாவிஸ் மனம் மாறியது ஏன்?
பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.
Recommended Video
டெல்லி: பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்தான் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியில் இருந்து விலகினார் என்று கூறுகிறார்கள்.
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நாளை மாலை 5 மணிக்கு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்குள் முதல்வர் பதவியில் இருந்து பட்னாவிஸ் பதவி விலகினார்.
அதேபோல் அஜித் பவாரும் துணை முதல்வர் பதவியில் இருந்து பதவி விலகினார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா நடத்திய சந்திப்பிற்கு பின்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
முக்கிய முடிவு
பொதுவாக முக்கிய முடிவுகள் எடுக்கும் ஆலோசனைக் கூட்டங்களில் எல்லாம் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மட்டுமே இருப்பார்கள். ஆனால் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்முறையாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டாவும் உடன் இருந்திருக்கிறார். இதில் மூன்று முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்தனர்.
நாளை என்ன நடக்கும்
மகாராஷ்டிராவில் நாளை நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு யாரை இடைக்கால சபாநாயகராக போடுவது என்று ஆலோசனை செய்துள்ளனர். யாரை நியமித்தால் சிறப்பாக முடிவு செய்வார். யாரால் சிவசேனாவின் அதிரடியை சமாளிக்க முடியும். நெருக்கடியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க முடியும் என்று ஆலோசனை செய்துள்ளனர்.
எப்படி செய்யலாம்
அதேபோல் மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் எத்தனை எம்எல்ஏக்கள் தேவை. சிவசேனாவிடம் இருந்து எம்எல்ஏக்களை இழுக்க முடியுமா என்றும் ஆலோசித்து இருக்கிறார்கள். உண்மையில் பெரும்பான்மை கிடைக்குமா? என்று ஆலோசனை செய்தனர். ஆனால் இதில் நமக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறியுள்ளனர்.
அஜித் பவார் எப்படி
இதில் மிக முக்கியமாக அஜித் பவார் குறித்தும் ஆலோசனை செய்து இருக்கிறார்கள். அஜித் பவாரை நம்பலாமா? அவர் ஏன் பாஜகவுடன் நெருக்கமாக இல்லை. உண்மையில் அவர் பாஜகவிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தது ஏன் என்பது குறித்தும் இவர்கள் மூவரும் ஆலோசனை செய்து இருக்கிறார்கள். சரியாக அப்போதுதான் அஜித் பவார் பதவி விலகுவதாக அறிவித்தார்.
வேண்டாம்
இதனால் மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டாம். அவையில் சென்றால் அவமானம். அதனால் அதற்கு முன் பதவி விலக வேண்டும் என்று ஆலோசனையில் முடிவு செய்துள்ளனர். இவர்கள் அதன்பின் பட்னாவிஸ் உடன் ஆலோசனை செய்து அவரை பதவி விலக சொல்லி இருக்கிறார்கள். இதனால்தான் அவர் மனம் மாறினார் என்று கூறினார்கள்.