மணிப்பூர் வன்முறை வெட்கக்கேடானது.. அதை அரசியல் செய்வது அதைவிட வெட்கக்கேடானது.. அமித்ஷா ஆவேசம்
டெல்லி: மணிப்பூர் வன்முறை வெட்கக்கேடானது. ஆனால் அதைவைத்து அரசியல் செய்வது, அதைவிட வெட்கக்கேடானது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிப்பார் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை முதலில் ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் பின்னர் பாஜகவின் பதிலை ஏற்றுக்கொண்டன. அதன்பின்னர் நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. நேற்று தொடங்கிய இந்த விவாதம் இன்றும் நடந்தது. இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காரசாரமாக பேசினார்.
இன்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசும் போது, "நான் பேசுவதை கேட்டு நீங்கள் அச்சப்பட வேண்டாம். நான் இன்று மோடி அதானி உறவு குறித்து பேசப்போவதில்லை எனவே நீங்கள் பயப்பட வேண்டாம் அமைதியாக இருங்கள். எனது ஒற்றுமை யாத்திரை இன்னும் முடியவில்லை. நான் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் சென்று இருந்தேன்
ஆனால் பிரதமர் இன்று வரை அங்கு செல்லவில்லை அவரைப் பொறுத்தவரை நாட்டில் ஒரு பகுதியாக மணிப்பூர் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார். இந்த மத்திய அரசு இந்தியாவுடைய அடிப்படையையே கொலை செய்து விட்டது. மணிப்பூர் மாநிலத்தை இரண்டாக மத்திய அரசு பிளந்து விட்டது. எனது ஒரு அம்மா இங்கே எனது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால் எனது இன்னொரு தாயான மணிப்பூர் மாநிலத்தின் பாரதமாதாவை நீங்கள் கொலை செய்திருக்கிறீர்கள்" என்று கூறினார். இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்தார்.
இறுதியாக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நாட்டில் பிரதமர் மீதும் இந்த அரசாங்கம் மீதும் நம்பிக்கை இல்லை என்ற மாயையை ஏற்படுத்தவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாட்டில் எதிர்க்கட்சிகளின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. எனவே நாம் இந்த அரசின் சாதனைகளில் தான் கவனத்தை செலுத்த வேண்டும். நீங்கள் திட்டங்களை உருவாக்குகிறவர்கள்; ஆனால் நடைமுறைப்படுத்தாதவர்கள். நாங்கள் செயல்படுத்தக் கூடியவர்கள்.
மத்திய அரசு ரூ1 செலவு செய்தால் அதில் பொதுமக்களுக்கு 15 பைசாதான் கிடைக்கிற நிலைமை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்தது; இப்போது ரூ1-ம் முழுமையாக மக்களுக்கு செல்லும் நிலைமையை உருவாக்கி இருக்கிறோம். விவசாயிகள், பெண்கள் மற்றும் ஏழைகளுக்காக இந்த அரசு கவனம் செலுத்தியது.
கோவிட் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்து மத்திய அரசு கடுமையாக போராடியது. வடகிழக்கு மாநிலங்களுக்கு அவர்கள் (காங்கிரஸ்) எதுவும் செய்யவில்லை, நாங்கள் தேவையானவற்றை அந்த மாநிலங்களுக்கு செய்தோம்... ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளாக எதுவும் நடந்திருக்கவில்லை.. காங்கிரஸ் கட்சி அங்கு உட்கட்சி பூசலை ஊக்குவித்திருந்தது.
இப்போது வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் 68 சதவீதம் குறைந்துள்ளது.. அங்கு செய்திருக்கும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் பயண நேரத்தையும், தூரத்தையும் குறைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகளில் 50 முறை வடகிழக்கு பகுதிகளுக்கு சென்று இருக்கிறார். வடகிழக்கை இந்தியாவுடன் இணைத்தார்,
30 ஆண்டுகளாக நாடு வம்ச அரசியல், ஊழல், ஜாதி வெறி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி இதையெல்லாம் முடித்துவிட்டு நாட்டுக்கு நல்ல அரசை வழங்கினார். சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா முழுவதுமாக நம்பும் ஒரு தலைவர் இருந்தால் அது பிரதமர் மோடி மட்டுமே. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை, சீர்குலைப்பதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்டிருக்கிறது.
நரசிம்மராவ் ஆட்சியில் இருந்தபோது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்ற ஆசைப்பட்டது . அதற்காக ஜேஎம்எம் மற்றும் பல தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்தது. பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், அப்படித்தான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸ் வென்றது. ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் காங்கிரஸைப் போல பாஜக லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்றது இல்லை.
கடந்த 1999ல், அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தின் போது, நாங்களும் அதை போல் (தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்து) செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. வெறும் ஒரு வாக்கு வாத்தியாசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றோம்.
இன்றைக்கு எங்கள் அரசுக்கு மெஜாரிட்டி இருப்பதை இருப்பதை நன்கு அறிந்து தான் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. நேற்று விவாதத்தைத் தொடங்கிவைத்த காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் பேசும் போது மணிப்பூர் குறித்துப் பேசுவதற்கு பிரதமரை நிர்ப்பந்திப்பதற்காகவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக ஒப்புக்கொண்டார். இந்தக் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு தயாராக இல்லை" இவ்வாறு அமித்ஷா கூறினார்.
நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமாக பேசிய ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா, இந்த அவையில் 13 முறை சபையில் ஏவப்பட்டு 13 முறை தோல்வியடைந்த தலைவர் ஒருவர் இருக்கிறார் என்று கூறினார். மேலும் ராகுலை காலாவதி என்று மறைமுகமாக குறிப்பிட்டார். அந்த 'காலாவதி'க்கு அனைத்து வசதிகளும் எங்கள் அரசால் செய்து கொடுக்கப்பட்டது என்று கூறினார்.
மணிப்பூர் வன்முறை குறித்து பேசிய அமித்ஷா, மணிப்பூர் வன்முறை வெட்கக்கேடானது. ஆனால் அதைவைத்து அரசியல் செய்வது, அதைவிட வெட்கக்கேடானது என்றார். அமித்ஷா இதுபற்றி பேசும் போது, மணிப்பூரில் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன- அதனை யாரும் நியாயப்படுத்தவில்லை.

மணிப்பூர் குறித்து தொடக்கம் முதலே விவாதிக்க நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் எதிர்க்கட்சிகள்தான் விவாதிக்க விரும்பவில்லை. என்னுடன் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. ஆனால் என்னை அவர்கள் அமைதிப்படுத்த முடியாது. 130 கோடி மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்; அவர்கள் கேட்பார்கள். 6 ஆண்டுகளில் ஊரடங்குகள் அதிகரித்தது இல்லை- அமித்ஷா
6 ஆண்டுகளில் மணிப்பூரில் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தியது இல்லை. அங்கே முழு அடைப்பு நடைபெற்றது இருந்தது. தீவிரவாதிகள் வன்முறை முடிவுக்கு வந்துவிட்டது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. குக்கி ஜனநாயக முன்னணி கட்சி அதிகாரத்துக்கு வந்ததால் மியான்மர் எல்லையில் வேலிகள் இல்லை. குக்கிகள் மியான்மரில் இருந்து மிசோரம், மணிப்பூர் மாநிலத்துக்கு வருகை தந்தனர். இதுதான் பிரச்சனைக்கு அடிப்படையானது.
மணிப்பூரில் வன்முறை குறைந்து வருகிறது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகிறேன். ராகுல் காந்தி மணிப்பூர் சென்றது அரசியல். நாங்கள்தான் ராகுல் காந்தியை சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்ல சொன்னோம். ஆனால் அவர் சாலைமார்க்கமாக செல்வேன் என்றார். அதனால்தான் போலீசார் அவரை தடுத்தனர். மைத்தேயி, குக்கி இனமக்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வு அல்ல. நாங்கள் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவோம் என உறுதி அளிக்கிறோம். இந்த பிரச்சனையில் அரசியல் செய்ய வேண்டாம்" என அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications