"இதை சொன்னது நீங்கதான்".. மோடியின் பழைய வீடியோவை வெளியிட்ட மணிஷ் சிசோடியா.. சரமாரி தாக்கு
டெல்லி: "அப்பாவி மக்களுக்கு தொல்லை கொடுக்க சிபிஐ பயன்படுத்தப்படுகிறது" என்று குஜராத் முதல்வராக இருந்த போது பிரதமர் நரேந்திர மோடி கூறிய வீடியோவை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தற்போது பகிர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய மதுபானக் கொள்கை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கொள்கையில் சட்டவிரோதமாகவும், உரிய அனுமதி பெறாமலும் பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்தக் கொள்கையின் மூலம் மதுபான சில்லறை விற்பனைக்கான உரிமங்களை பெற்று பெருமளவில் லாபம் ஈட்டுவதற்காக மதுபான உற்பத்தியாளர் ஒருவர் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கோடிக்கணக்கில் பணம் தந்துள்ளதாக தனது முதல் தகவல் அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. அந்தத் தொகையை நேரடியாக மணீஷ் சிசோடியாகவுக்கு கொடுக்காமல், அவருக்கு நெருக்கமாக இருக்கும் சிலரது நிறுவனங்களுக்கு கைமாற்றப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்திருக்கிறது. இந்த மதுபானக் கொள்கை நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக டெல்லி அரசு அதிகாரிகள் உட்பட 13 பேர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதனிடையே, மணீஷ் சிசோடியா வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்திய சிபிஐ, இன்று அவர் உட்பட 14 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை பிறப்பித்தது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.
எனினும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை முடக்குவதற்காக மத்திய அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் மணீஷ் சிசோடியா கூறி வருகிறார்.
பழைய வீடியோ
இந்நிலையில், மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த சமயத்தில் குஜராத் முதல்வராக இருக்கும் மோடி சிபிஐ அமைப்பை விமர்சித்து பேசுகிறார். அதில் அவர், " குஜராத் அதிகாரிகளை சிபிஐ அரசியல் காரணங்களுக்காக துன்புறுத்தி வருகிறது. அப்பாவி மக்களுக்கு தொல்லை கொடுப்பதற்காகவும், அவர்களை சிக்க வைப்பதற்காகவும் சிபிஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. குஜராத் அமைச்சர்களை சிறையில் தள்ளுவதற்காக சிபிஐ அமைப்பை மத்திய அரசு ஓர் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் மக்கள் முன்பு சிபிஐ பதில் சொல்ல வேண்டும்" என நரேந்திர மோடி பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுதொடர்பாக மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவாக ஒருதரப்பும், எதிராக மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications