அடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்
டெல்லி: கடந்த ஓராண்டில் பாஜகவின் முன்னணித் தலைவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளது அந்த கட்சி தொண்டர்களை கலகத்துக்கு உள்ளாகியுள்ளது.
பாஜகவின் நிறுவன தலைவர்களில் ஒருவர் அட்டல் பிகாரி வாஜ்பாய். நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் வாஜ்பாய். இதனால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டுக்குள்ளேயே சிகிச்சை பெற்றபடி இருந்தார்.
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த வருடம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வாஜ்பாய் இயற்கை எய்தினார். பாஜக சார்பில் முதல் முறையாக பிரதமர் ஆனவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. பொக்ரான் நாயகன், தங்க நாற்கர சாலை திட்டத்தின் பிதாமகன் என பல்வேறு விஷயங்களுக்காக நாட்டு மக்களாலும், பாஜக தொண்டர்களாலும் மிகவும் மதிக்கப்பட்டவர் வாஜ்பாய்.
மனோகர் பாரிக்கர்
வாஜ்பாய் இறந்த துக்கம் தீர்வதற்குள் இந்த ஆண்டு, மற்றொரு மூத்த பாஜக தலைவர் மனோகர் பாரிக்கர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். நீண்ட காலமாக புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பாரிக்கர், 2019 ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி, மண்ணுலகை விட்டு கிளம்பினார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்.., கோவா மாநில முதல்வர் போன்ற பதவிகளை வகித்தவர் அந்தக் கட்சியின் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களில் இவரும் ஒருவராக திகழ்ந்தவர்.
சுஷ்மா சுவராஜ்
இந்த சோகங்களில் இருந்து பாஜகவினரும், நாட்டு மக்களும் மீள்வதற்குள், அதற்குள் மற்றொரு பெரிய இடி அவர்கள் தலையில் இறங்கியது. கடந்த 6ம் தேதி அது நடந்தது. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மக்கள் ஆதரவு
டெல்லி முதல்வராக குறுகிய காலம் பதவி வகித்த சுஷ்மா ஸ்வராஜ், மோடி அரசின் முதலாவது பதவிக்காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து நாட்டு மக்களிடையே மட்டுமன்றி, சர்வதேச மக்களிடமும் மிகவும் அறியப்பட்ட ஒரு பெண் தலைவராக விளங்கினார். மக்களுடன் எப்போதுமே தொடர்பில் இருந்த பாஜக தலைவர்களில் ஒருவர் இவர். அந்த கட்சியில் பெரும் பதவிகளை வகித்த ஒரு சில பெண் தலைவர்களில் இவரும் முக்கியமானவர்.
அருண் ஜெட்லி
இந்த நிலையில்தான் ஒரே மாதத்திற்குள் அடுத்த பேரிடியாக அருண் ஜேட்லியின் மரண செய்தி வந்துள்ளது. இவரும் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் கடந்த 10 நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி அருண்ஜெட்லி உயிர் இன்று பிரிந்தது. நிதியமைச்சராக திறம்பட செயலாற்றியவர் என்ற பெருமை பெற்றவர் அருண் ஜெட்லி.
4 முக்கிய தலைவர்கள்
பாஜக ஆளும் மாநிலங்களில் அல்லது உட்கட்சி பிரச்சினைகளின்போது அவற்றை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்களிப்பாளராக விளங்கியதால், ட்ரபிள் ஷூட்டர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர். ஓராண்டில் மிக முக்கியமான நான்கு தலைவர்களை இழந்து தொடர்ந்து தத்தளித்து வருகிறது பாஜக. இது அந்த கட்சி தொண்டர்களை மட்டுமின்றி, இந்த தலைவர்களை தங்கள் ஆதர்ச நாயகர்கள் என்று கருதிய நாட்டின் கணிசமான மக்களுக்கும் பெரும் பேரிழப்பு என்றால் அது மிகையல்ல.