பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் எவ்வளவு குறையும்? ஓபனாக சொன்ன வாகன நிறுவனங்கள் கூட்டமைப்பு
டெல்லி: பெட்ரோலுடன் எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்டு வருகிறது. எத்தனால் கலப்பால் வாகனங்களின் மைலேஜ் குறைவதோடு, பழுதடைவதாகவும் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் உடன் எத்தனால் கலந்து விற்பனை செய்யும் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. எத்தனால் அளவு மெல்ல அதிகரிக்கப்பட்ட நிலையில், இப்போது அது 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பினால் அதில், 80 சதவீதம் பெட்ரோலும் 20% எத்தனாலும் உள்ளது.

வாகன ஓட்டிகள் அச்சம்
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாகவும், வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் நோக்கிலும் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகவும், வாகனங்கள் பழுதடைவதாகவும் சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை மத்திய அரசு மறுத்தபோதிலும் வாகன ஓட்டிகள் இடையே ஒருவித அச்சம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் தான், அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு இது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளது. இது தொடர்பாக வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூறியதாவது:-
மைலேஜ் 50 சதவீதம் குறையும்
E20 எனப்படும் எத்தனால் கலப்பு பெட்ரோலை பழைய வாகனங்களுக்கு பயன்படுத்தும் போது மைலேஜ் குறைகிறது. ஆனால், வாகனங்களின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தி இயங்கும், லட்சக்கணக்கான வாகனங்கள் சமீப காலமாக சாலையில் ஓடுகின்றன. ஆனால் ஒரு வாகனம்கூட பழுதடையவில்லை. எஞ்சின் கோளாறு ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை.
இத்தகைய பிரச்சனை எழுந்தாலும் கூட வாரண்டி மற்றும் காப்பீடுகளை முழுமையாக நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். எத்தனால் கலப்பால் வாகனங்களின் மைலேஜ் 50 சதவீதம் குறையும் என்று சொல்லப்படுவது ஆதாரமற்றது. தவறான தகவலும் கூட... பிரத்யேக ஆய்வில் 2 முதல் 4 சதவீதம் அளவிற்கு குறைவதை தரவுகள் காட்டுகின்றன. எனினும், வெளிப்புற சூழலில் வாகனங்களை இயக்கும் போது, பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மைலேஜ் குறைவு அளவானது அதிகரிக்கும்.
வேறு சாய்ஸ் இல்லாத நிலை
அதாவது ஆன்-ரோடில் இது மாறுபடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில் (SIAM) முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. மாருதி சுசுகி, ஹூண்டாய் மோட்டார், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா மோட்டார் ஆகிய நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பெட்ரோல் எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது. பழைய வாகனங்களுக்கு ஏற்றபடி E5 மற்றும் E10 என்ற முறையில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. எனினும், தற்போது கிட்டத்தட்ட இந்த அளவு நீக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 90 ஆயிரம் எரிபொருள் நிலையங்களிலும் E20 பெட்ரோலே விற்பனையாகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு வேறு சாய்ஸ் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
நிதின் கட்காரி விளக்கம்
முன்னதாக கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, எத்தனால் கலப்பால் வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக நிதின் கட்காரி கூறுகையில், "20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தியதால், நாட்டில் எந்த ஒரு காருக்காவது பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதா? அப்படி ஒரு உதாரணத்தைச் சொல்லுங்கள்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications