மோடி கேபினட்டில் மீண்டும் இடம்பிடித்த பெண் சாமியார்: சர்ச்சை பேச்சால் புயலை கிளப்பிய நிரஞ்சன் ஜோதி!
டெல்லி: பாஜக மூத்த தலைவரும் பெண் சாமியாருமான நிரஞ்சன் ஜோதிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று இன்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.
பிரதமர் மோடி இன்று மீண்டும் இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக அரியணையில் அமர்ந்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அமைச்சரவையில் பதவி
இன்று பிரதமர் மோடியின் அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. மோடியின் அமைச்சரவையில் பல மூத்த தலைவர்களுக்கும் கடந்த முறை அமைச்சர் பதவியில் இருந்தவர்களுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நிரஞ்சன் ஜோதி
மேலும் கூட்டணி கட்சிகளுக்கும் மோடியின் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூட்டணியில் இருந்தும் ஒரு எம்பிக்கு அமைச்சர் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும் கடந்த முறை மோடி அமைச்சரவையில் இணையமைச்சருமாக இருந்தவருமான பெண் சாமியார் நிரஞ்சன் ஜோதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெண் சாமியார்
பெண் சாமியாரான நிரஞ்சன் ஜோதி உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் பட்டேவ்ரா கிராமத்தில் 1967ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர் அச்சுதானந்த், தாயர் சிவ காளி தேவி. நிஷாத் சமூகத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் ஜோதி.

2014ல் இணையமைச்சர்
கடந்த 2012ஆம் ஆண்டு ஹமீர்பூர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார் நிரஞ்சன்ஜோதி. இதைத்தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஃபதேபூர் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். இதனால் அவருக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

உயிர்தப்பிய நிரஞ்சன் ஜோதி
2014ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி லக்னோ அவாஸ் விகாஸ் காலனியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிய போது பானு பட்டேல் என்பவர் அவரது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து நிரஞ்சன் ஜோதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நூலிழையில் உயிர் தப்பினார் நிரஞ்சன் ஜோதி. ஆனால் நிரஞ்சன் ஜோதியின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தனர்.

சர்ச்சைப்பேச்சு
இவரும் தனது பேச்சால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். குறிப்பாக கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நிரஞ்சன் ஜோதி, டெல்லி மாநில அரசு ராமபிரானின் மகன்களால் நடத்தப்பட வேண்டுமா? அல்லது இழி மகன்களால் நடத்தப்பட வேண்டுமா என காங்கிரஸை தாக்கிப் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

புயலை கிளப்பிய பேச்சு
அவரது இந்த பேச்சு நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியது. இதைத்தொடர்ந்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த நிரஞ்சன் ஜோதி மன்னிப்பும் கேட்டார். தற்போது மோடி அமைச்சரவையில் மீண்டும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications